தென்கிழக்கு வாசமல்லி - 4

தென்கிழக்கு வாசமல்லி - 3

வைத்தியநாதன் எனக்கு நினைவு தெரிய ஆரம்பிச்சக் காலத்துல்ல இருந்து எனக்கு நண்பன்..என் மனச்சாட்சிகிட்ட சொல்லாம மறைக்க நினைச்ச எத்தனையோ விசயங்களைக் கூட நான் வைத்திகிட்ட மறைச்சது இல்ல...அவன் தங்கச்சி மூக்களகியைக் கூட எனக்காக கை ஓங்கி வைத்தி அடிச்ச சம்பவம் நிறைய இருக்கு...

வைத்திக் கூட சேர்ந்து செஞ்ச ஒவ்வொரு விஷ்யமும் என்னையும் மீறி என் கண்ணுக்குள்ளே வரிசை கட்டி நிக்க ஆரம்பித்தன...முப்பது கிலோ மீட்டர் தாண்டி போய் டென்ட் கொட்டாயிலே முதல் முதலா பலான படம் பார்த்தது...அவங்க மாமா சிகரெட்டை மாத்தி மாத்தி அடிச்சு முதல் தம் அனுபவம் பெற்றது...சரக்கு அடிக்க ஒரு வாரமாக் காசு சேர்த்து பத்தாமப் போய் மூக்களகி கொலுசை சுருட்டி வித்து என் முதல் தண்ணி பந்தல் அமைச்ச வள்ளல் என் வைத்தி....ச்சே ஒரு பொண்ணுக்காக போய் அவன் மேல கையை வச்சுட்டோமேன்னு ஒரு பக்கம் மனசு லேசா வலிக்க ஆரம்பிச்சது...

இங்கேயே இருந்தா ஒரு நிலையிலே மனசு நிக்காது...அப்படியே டவுண் பஸ் ஏறி தென்காசி வரைக்கும் போயிட்டு வருவோம்...மனசு அமைதியாகிரும் அப்படின்னு ஒரு கணக்கு போட்டுட்டு பஸ் ஸ்டாண்ட் பார்த்து நடக்க ஆரம்பிச்சேன்...டீ கடையிலே போய் ஒரு தம் போட்டுட்டு ஒரு டீயும் அடிச்சுட்டு போலாம்ன்னு டீ கடை பக்கம் ஒதுங்குனேன்...

டீயைச் சூடா தொண்டைக்குள்ளே இறக்கிட்டு ரோட்டை வேடிக்கைப் பாத்துகிட்டே நின்னேன்... சல்லுன்னு என்னைத் தாண்டி ஒரு டிவிஎஸ் 50 தாண்டிச்சு....புழுதி கிளப்பிட்டுப் போன வண்டி சந்தேகமில்லாமல் வைத்தி வீட்டு வண்டி தான்...வண்டியிலே போனது வைத்தி...பின்னாடி உக்காந்துப் போனது அவளே தான்....மிச்சமிருந்த டீயை சடக்குன்னு வந்த கோபத்திலே தூர எறிஞ்சுட்டு வண்டி போன பக்கம் எரிச்சலாப் பாத்துட்டு நின்னேன்...

"தம்பி டீ காசு ஒண்ணே காலைக் கொடுப்பா.." டீக்கடைகார் அண்ணன் குரல் கேட்டு பாக்கெட்டில் கை விட்டு காசைத் துழாவி எடுத்து கொடுத்தேன்...

தென்காசி பிளானைக் கேன்சல் பண்ண்ட்டு ஆத்திரமா வீட்டைப் பார்த்து திரும்பி நடந்தேன்...ம்ம்ம் கிரவுண்ட்க்குத் தான் போயிருப்பான்..அங்கே தான் வண்டி ஓட்டச் சொல்லித் தர முடியும்..அங்கேயே போய் பாத்துருவோம் அப்படின்னு கிளம்பினேன்..

நாலு ஆள் ஆச்சு சரியா தூங்கி....ப்ச்...என்னா அடி தெரியும்ல்ல....விளையாட்டுன்னா அதுல்ல இவ்வளவு கோவம் ஆகாது...பாவம் பையன்...." அம்மாவின் குரலைக் கேட்டு கட்டிலில் இருந்து உடம்பை கஷ்ட்டப் பட்டு நகத்தி ஜன்னல் பக்கம் தலையை நீட்டுனேன்.

பக்கத்து வீடு கிட்டத்தட்ட முடியற நிலைக்கு வந்துருச்சி...இன்னும் ஒரு பத்து பதினைஞ்சு நாள்ல்ல பால்காய்ப்பு இருக்கும்ன்னு நினைச்சுகிட்டேன்...அம்மா என் கதையைத் தான் பிரசங்கம் பண்ணிகிட்டு இருக்காங்கன்னு நல்லா புரிஞ்சது...அவளும் அங்கே இருக்காளான்னு ஜன்னல்ல எவ்வளவு முடியுமோன்னு அவ்வளவு தலையை நெளிச்சுப் பார்த்தேன்...நீலத் துப்பட்டா காற்றில் ஆடியது தெரிந்தது அவளும் அங்கேத் தான் இருந்தா...

"மேட்ச்ல்ல தோத்துட்டாங்கன்னு தனியா வந்த இவனை பனை மட்டையிலே போட்டு விளாசு விளாசுன்னு விளாசி இருக்கான்வ...முதுகுல்ல பட்டை பட்டையா தொலி உரிஞ்சு...இப்போத் தான் கொஞ்சம் பரவாயில்ல...ஆனா ரொம்ப சிரமப்பட்டுட்டான்...."

அச்சோ அய்யோ என அக்கறையாய் விசாரிப்புகள் தொடர்ந்தன..அதுல்ல ஒரு அச்சோவாச்சும் அய்யோவாச்சும் அவ சொல்லியிருப்பாளான்னு காதைத் தீட்டிக் கேட்டும் என்னாலக் கண்டுபிடிக்க முடியல்ல..

முதுல்ல வலி பின்னி எடுக்க குப்புற படுத்துட்டு கண்ணை மூடிகிட்டேன்....எப்போ தூங்குனேன்...எப்படி தூங்குனேன்னு தெரியாமலே தூங்கிப் போயிட்டேன்...லேசான மல்லிகை வாசம் சித்தம் துளைக்க முழிப்பு தட்டுனப்போ ஜன்னல் வெளியே வானம் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாறி போயிருந்தது

ம்ம் மணி ஆறாகியிருக்கும்...மல்லி வாசம் எங்கே இருந்து வருதுன்னு ஜன்னல் வழியா எட்டிப்பார்த்தேன்...அந்த மல்லி கொடியிலே அங்கே ஒண்ணும் இங்கெ ஒண்ணுமா மொட்டு எல்லாம் மெல்ல விரிஞ்சு கிடந்துச்சு..வலியையும் மீறி ஒரு புத்துணர்வு வந்துச்சு அப்படி ஒரு அழகானக் காட்சி அது...ஒரு துண்டை எடுத்து மேலுக்குப் போத்திட்டு கீழே போய் நின்னேன்...அப்பா மல்லி வாசம் என்ன ஒரு அற்புத வாசம்...மூச்சை நல்லா இழுத்து மல்லி வாசத்தை எனக்குள்ளே இழுத்துகிட்டேன்...

"ம்ம்ம்ஹும்..."

"ம்ம்ம்கூம்"

"ம்ம்ம்ம்ம்ம்கூஊஉம்"

"காதுல்ல கூட செம் அடி போலிருக்கு....சுத்தமாப் போயிடுச்சு போல..." சுளுக்குன்னு ஒரு சிரிப்பு சத்தம் வேற உசுப்பு ஏத்த பொட்டியை உரசுன வத்திகுச்சி மாதிரி சர்ன்னு திரும்புனேன்..பூவைப் பாத்து புயல் வணக்கம் வச்சு பாத்து இருக்கீங்களா...அப்படி ஒரு காட்சி அங்கே நடக்க இருந்துச்சு..ஆனா ஒரு சின்ன இடைவெளியில் நடக்காமல் தடுக்கப்பட்டது....

ரேடியோவில்ல சிம்புவோட அப்பா பொன்னான மனசே பூவான மனசே நீ வைக்காத பொண்ணு மேல ஆசன்னு பாடிகிட்டு இருந்தார்....பொல்லாத மனசு எங்கே அறிவுரையைக் கேக்குது.... ஒத்த சடைப் போட்டு தோளுக்கு முன்னாடிப் போட்டிருந்தா அதுல்ல நீளாமா மல்லிகை பூ....பாவாடைத் தாவணியிலே தாமிரபரணியின் சலசல குளிர்ச்சியோடு மலர்ச்சியா நின்னுட்டிருந்தா... பத்த வச்ச பூவாணாம்...பூக்காம புஸ்ஸாகிப் போனப்புல்ல என் கோபம் நான் எவ்வளவோ தடுத்தும் என்னைக் கேக்காம வெளிநடப்பு செய்துகிட்டு இருந்துச்சு....

மொத்தக் கோபத்தையும் ஒத்தச் சிரிப்புல்ல ஊதி தள்ளிட்டா....இருந்தாலும் கெத்து குறையாமல் போலி முறைப்பு காட்டிட்டு அவளைப் பாத்தேன்...

"ம்ம் யாராவது அப்பாவி சிக்கிட்டா....சப்புன்னு அடிச்சு தான் வீரன்ன்னு நினைப்புல்ல திரியறது...அப்புறம் உண்மையா அடிதடிக்கு அஞ்சாதவங்க வந்தா...அடி உதைன்னு வாங்கிட்டு ஆஸ்பிட்டல் போய படுக்குறது.. இதெல்லாம் என்ன சங்கதியோ...."

"அப்பாவியா...யாரு அப்பவி?" அணையப் போன கோப தீயில் அவப் பேச்சு எண்ணெய் விட்டது போலிருந்துச்சு...

"வைத்தி தான்....பாவம் வைத்தி...தெரியுமா?"

"நிப்பாட்டிட்டு கிளம்பிரு....போதும்" வலி அதிகமா இருந்தும் இரண்டு கைகளையும் தூக்கி அவளைக் கும்பிட்டு தான் கேட்டேன்....

"ஒண்ணு அடி தடி இல்லைன்னா கும்பிடா..." மறுபடியும் அதே சிரிப்பு...

"போதும் போயிரு...." என் குரல்ல இருந்த கடுமை எனக்கே ஆச்சரியமா இருந்தது..

"போகல்லன்னா.. என்ன பொம்பள பிள்ளை தானே....வைத்தி மாதிரி அப்பாவியா வாங்கிட்டு போயிருவேன்னு நினைப்பா.... கராத்தே பழகி இருக்கேன்..பிளாக் பெல்ட் வாங்கியிருக்கேன்.....தெரிஞ்சுக்கோ.." அப்பவும் அவ சிரிச்சுகிட்டே தான் சொன்னா..

"சரிடீ... கேக்குது... உனக்கு உன் தாவணியைப் பிடிச்சிட்டு பின்னாலே வரதுக்கு அந்த வைத்தி தான் லாயக்கு... அவன் அப்பாவி தான்.... இப்போ என்னை வெறுப்பு ஏத்தறதை விட்டுட்டு அவனைத் தேடிப் போறீய்யா..." எப்படியோ என் கோபத்தை கொட்டி தீர்த்த திருப்தி எனக்குள்ளே வந்துச்சு....

"என்னச் சொன்ன..... வைத்தியைத் தேடிப் போகணுமா... தப்பா பேச வேணாம்... சொல்லிட்டேன்..." முதல் முறையா அவ முகத்துல்ல சிரிப்பு தொலைஞ்சுப் போயிருந்துச்சு....எனக்கு லேசா சிரிப்பு வந்துச்சு..

"ஆமா..அவன் கிட்டத் தான் போகச் சொன்னேன்.... ரெண்டு பேரும் சேந்து தானே வண்டியிலே ஒட்டிகிட்டும் உரசிகிட்டும் வீதி உலா வந்தீங்க.... என்னா சிரிப்பு.... என்னா நெருக்கம்...."

"என்னப் பேசுறன்னு புரிஞ்சு பேசுறீய்யான்னு யோசிச்சுக்கோ..." அவ முகத்தில் சிரிப்பு சுத்தமாப் போய் ஒரு இறுக்கம் நிறைஞ்சு இருந்தது..

"ஆமா எல்லாம் தெரியுது... உங்க தில்லியிலே எப்படின்னு தெரியாது... இங்கே ஒருத்தன் கூட ஒருத்தி சுத்துன்னா அது தான் அர்த்தம்...அதுவும் வைத்தியைப் பத்தி உன்னை விடஎனக்குத் தெரியும்...உன்னை என்ன எல்லாம் பண்ணியிருப்பான்னும் .. தெரிஞ்சுக்க முடியும்..அந்தக் கேவலப் பொழப்பு எனக்கு வேணாம்...போயிரு..."

ஆத்திரத்தில் பொங்குவாள்ன்னு பாத்தா..பொல பொலன்னு அழ ஆரம்பிச்சுட்டா.....சொன்ன சொல்லைப் பத்தி நினைக்கல்லன்னாலும் அவ அழுதது என்னமோ மாதிரி ஆயிடுச்சு...அப்பவும் கூட எனக்கு அவ மேல கோபம்ன்னு சொல்ல முடியாது..வைத்தி மேலத் தான் கோபம்... வைத்தியை அவ மெச்சுனது தான் கோபம்... அந்தக் கோபத்துக்கான காரண காரியங்களை ஆராயுற மனசுல்ல நான் அப்போ இல்லை...
அவ அழறதைப் பாக்க பிடிக்காம நான் திரும்பிகிட்டேன்....

எவ்வளவு நேரம் அப்படியே நின்னேன்னு எனக்கேத் தெரியாது.... நான் திரும்பி பாக்கும் போது அவ அங்கே இல்லை....அந்நேரத்துக்கு நான் சந்தோசம் தான் பட்டிருக்கணும்.... ஆனா மனசு ஒரு ஓரமா வலிச்சது...அந்த வலி அப்படியே மனசு முழுக்க பரவ ஆரம்பிச்சது....

ராத்திரி முழுக்கத் தூங்க முடியல்ல... கட்டில்ல புரண்டு உருண்டு படுத்துப் பாத்தேன்..உறக்கம் பிடிக்கல்ல... அவ அழுகையும் சிரிப்பும் மாறி மாறி என் கண்ணு முன்னாடி வந்துப் போச்சு...

அட வெக்கம் கெட்ட விளக்கெண்ணெய்.... அந்தப் புள்ள மேல பிரியமாத் தானே இருக்க அப்புறம் எதுக்குடா அந்தப் புள்ளயைக் கண்ணீர் விட வச்ச.... உள் மனசு சாட்டை சுத்திச்சு... அந்த சாட்டை முனையைப் பிடிச்சு இழுத்த சைத்தான் மனசு... மாப்பி பொம்பளை புள்ள அழுகை எல்லாம் நம்பிராதே... நீ ஆம்பளை.... என்னச் செஞ்சுபுட்ட..... வில்லங்க வைத்தி என்னச் செஞ்சியிருப்பானோ அந்த உண்மையைத் தானே சொன்ன அப்படின்னு சப்பைக் கட்டு கட்டுச்சு...

இரண்டு மனமும் ஒவ்வொரு பக்கம் பிரிஞ்சு கிடக்க... நான் மல்லாந்து விட்டம் பாத்து கண் மூடாம இரவைக் கழிச்சேன்....

காலையிலே செம மழை....கண் முழிச்சி ஜன்னல் வழியாப் பாத்தேன்... மழையடிச்ச வேகத்துல்ல நேத்து பூத்த பிஞ்சு மல்லி செடி முறிஞ்சுப் போய் கிடந்துச்சு...

இன்னும் வாசம் வீசும்

தென்கிழக்கு வாசமல்லி - 3

தென்கிழக்கு வாசமல்லி - 2

"என்ன மாப்பி...கொஞ்ச நாளா ஒரு தினுசாத் திரியுற...என்ன சேதி..."

"எலேய் வைத்தி...இந்த காதல் காதல்ன்னு சொல்லுறான்வளே அப்படின்னா என்னலே..."

"ம்ம் அப்படிக் கேளு மாப்பி சொல்லுறேன்...தண்ணி அடிக்கும் போது....காரமாக் கொஞ்சம் போல ஊறுகாயை தொட்டு உள் நாக்குல்ல வைக்கும் போது ஜிவ்வுன்னு ஒரு கரண்ட் கிளம்பும் அதை ரசிச்சிருக்கீயோ...."

சரக்கை நினைச்சுகிட்டே உள்நாக்கை மடிச்சு ஊறுகாய் ஞாபகத்தோட வைத்திக்கு ஆமா போட்டேன்.

"வாழ்க்கையே ஒரு போதை மாப்பி...அந்த போதைக்கு ஒரு மகா பக்கப் போதை தான் இந்த காதல்....போதை தீருற வரைக்கும் நீ தான் ராஜா....உலகமே உனக்கு கூஜா......ஆனா மாப்பி எந்த போதையும் ஒரு நாள் இறங்கியேத் தீரும் அது உலக நியதி... காதலும் அப்படித் தான்...சரக்கடிச்ச மறு நாள் காலையிலே எந்தரிக்கும் போது தான் லைட்டாத் தலை வலிக்கும்... ஆனா காதலிச்சா.....விடாமா தலை வலிக்கும்...." ஒரு குட்டிப் பிரசங்கமே நிகழ்த்தி முடிச்சுட்டான் வைத்தி...

"வைத்தி...நீ சொல்லுறது குத்து மதிப்பாத் தான் புரியுது...ஆனா காதல்ங்கற மேட்டர் கொஞ்சம் கிக்காத் தான் இருக்கும் போல இருக்கு....கொஞ்ச நாளா இந்த எளையராஜா போடுற பாட்டெல்லாம் என்னை மனசுல்ல வைச்சே போடுற மாதிரி இருக்கு...அப்புறம்....பள்ளியூடத்துல்ல புரியாத பாரதியார் கவிதை எல்லாம்....இப்போ விளக்கமா விளங்குற மாதிரி இருக்கு...முக்கியமா இப்போ எல்லாம் இந்த பேர் அன்ட் லவ்லி வெளம்பரம் எனக்கு ரொம்பப் புடிக்குதுடா.."

"உன் மாமன்வளுக்கு எல்லாம் எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் காதலிக்கற வயசுல்ல பொண் பிள்ளையே கிடையாது..அப்புறம் எப்படி... காலேஜ்ல்ல கூட எல்லாப் பிள்ளையளும் நீ வரது தெரிஞ்சுடுத்துன்னாத் தெறிச்சுன்னா ஓடரதுகள் .... எப்படிப் பாத்தாலும் உனக்கு இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லையே...." வைத்தி கன்னத்தில் கை வைச்சு குத்த வைத்தான்

"லேய் வைத்தி...என் மாமன்வளுக்கு பிள்ளையல்வ இருந்தாலும் நாங்க லவ் எல்லாம் பண்ணிர மாட்டோம்.. நமக்குன்னு ஒரு லெவல் இருக்குல்லா...காலேஜ்ல்ல மீனாவும் ரம்பாவும் படிக்கிறாள்வ...நாங்க லவ் பண்ணுறதுக்கு பைக் எடுத்துட்டு கிளம்ப...போடா"

"மாப்பி... அதுகளும் அஜித் விக்ரம்ன்னு ஆசப் பட்டதாத் தான் சொல்லிட்டுத் திரியரதுகள்....நக்கல்.. மகா நக்கல் பிடிச்சதுகள்..."

"எவளுக்குமே அசராத என்னைய அவ ரொம்பவே அசைச்சு பாத்துட்டா வைத்தி...சும்மா ஒரு மின்னல் பொண்ணா வந்தப்பால்ல இருக்கு அவ நடவடிக்கை எல்லாம்...அப்படி ஒரு துறுதுறுப்பு குறுகுறுப்பு,,,அழகுல்ல லேசா வீரா படத்துல்ல வர்ற மீனா மாதிரி இருக்கா...மாடர்ன் ட்ரெஸ் போட்டா நதியா மாதிரி இருக்கா....லவ்ன்னு ஒரு வில்லங்கத்தைப் பண்ணா அவளைத் தான்டா பண்ண்ணும்ன்னு ஒரு தீர்க்கமான முடிவுக்கே வந்துட்டேன்டா"

"மாப்பி...ஆரம்பத்துல்ல அப்படித் தான் இருக்கும்..ஆறாங்கிளாஸ் படிக்கறச்சே குஷ்பூ படத்துக்கே தாலிக் கட்டி பொண்டாட்டி ஆக்குனவன் தானே நீ....அப்புறம் மீனா வந்தாப்போ அதே தாலியை மீனா படத்துக்கும் கட்டி பீல் பண்ணல்லயா.... விடு இதுவும் அப்படித் தான்....இன்னிக்கு இவ..நாளைக்கு இன்னொருத்தி...."

"ப்ச் வைத்தி....என் மவனே....என் மனசுல்ல இருக்கதை எப்படி சொல்லுவேன் உனக்கு.....நீயும் நானும் சாரா டக்கர்ல்ல எத்தனையோ பேரைப் பாத்துருக்கோம்... எப்படி எல்லாம் ரசிச்சிருக்கோம்...அதெல்லாம் சும்மா மேலுக்குத் தொட்டுப் போற காத்து மாதிரி இவ அப்படியே உள்ளுக்கு போயிட்டாடா... மூச்சு காத்து மாதிரி முழுசும் நின்னுட்டு இருக்காடே..."

"சரி வா பொழுது சாயறதுக்குள்ளே கிழக்கே பனங்காட்டுக்குள்ளே நல்ல கள்ளு கிடைக்கரதாம் அடிச்சுட்டு விவரமாப் பேசுவோம்..." வைத்தி அழைப்பை ஏற்க முடியாத படி அப்போ ஒரு சம்பவம் ஆகிப் போச்சு.

வைத்தியோட தங்கச்சி மூக்களகி மாலதியும் அவக்கூட சைக்கிள்ல்ல நம்ம தேவதையும் எங்களைப் பாத்து தான் வந்துட்டுருந்தாங்க..அவசர அவசரமாத் தலையைக் கோதிவிட்டுகிட்டேன்.... சட்டையை ஒரு முறை நேரா இழுத்து விட்டுகிட்டேன்...மாலதி நேரா வைத்தி பக்கம் போய் சைக்கிளை நிறுத்தினா...என்னை முறைப்பா ஒரு பார்வை பார்த்தா..மனசுல்ல வைஜெயந்தி ஐ.பி.எஸ்ன்னு நினைப்பு... என்.சி.சியிலே இருந்தா எதோ இந்திய ராணுவத்திலேயே இருக்கர மாதிரி ஒரு மிதப்பு...ஏழாம் நம்பரை திருப்பிக் கொஞ்சம் தட்டி போட்ட மாதிரி ஒரு மூக்கு...அதான் அவளுக்குப் பேர் மூக்களகி..அவளுக்கு நான் அந்தப் பேரை வச்சதால எனக்கும் அவளுக்கும் பல வருச பகை....சமயம் கிடைக்கும் போதெல்லாம் என்னைக் கவுக்க அவ தவறுனதே இல்லை... இப்போக் கூட அவப் பாத்தப் பார்வையிலே எதோ ஒரு வில்லங்கம் இருக்கற மாதிரியே எனக்குத் தெரிஞ்சது..என் தேவதை மேல நான் தீவிர நோக்கமா இருந்ததாலே மூக்களகியப் பெருசாக் கண்டுக்கல்ல..


"வைத்தி பாட்டு கிளாஸ்க்குப் போற வழியிலே சைக்கிள் பஞ்சர் ஆயிடுத்து..உன் சைக்கிள் கொடு...எங்களுக்கு கிளாஸ்க்கு நேரம் ஆரது,,"

"ம்ம்க்கும் மூக்களகிக்கு வெடிகுண்டு தொண்டை...பேசுன்னாலே தீபாவளி ஆட்டோம் அரை சவுண்டுல்ல வெடிச்ச மாதிரி இருக்கும்,,,இதுல்ல பாட்டு வேறயா...சோகம்டா...எனக்குச் சிரிப்பு கொள்ளல்ல.. நான் நினைச்சதே அவளுக்குக் கேட்டிருச்சுப் போல...

"வெட்டிப் பசங்களோட சுத்தாதே....பீடி சிகரெட் எல்லாம் குடிக்கிற கிராதகப் பசங்களோடச் சேந்தா நன்னாப் படிக்கிற நீயும் நாயாட்டம் போயிடுவன்னு அப்பா சொல்லற மாதிரி ஆயிடப் போற..." என்னைப் பார்த்து மேம்போக்காச் சொல்லுற மாதிரி சொன்னா மூக்களகி

அந்த மூக்குல்ல மொளகாத் தூல் முக்கா கிலோ வாங்கி கொட்டணும் போல எனக்குக் கோபம் பொத்துகிட்டு வந்துச்சு..இருந்தாலும் என் தேவதை பக்கத்துல்ல இருக்குறாளேன்னு அடக்கிட்டு நின்னேன்....

"வைத்தி..இது என் சினேகிதி....பேர்....உனக்குத் தான் தெரியுமே....அவளுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது... அப்படியே உன் சைக்கிள்ல்ல ஓட்டச் சொல்லிக் கொடுக்கலாம் இல்லையா..."

"ஓ தாராளமா.... நம்ம ஊருக்கு விருந்தாளியா வந்து இருக்கா.. நாமத் தானே எல்லாம் செய்யணும்...சைக்கிள் மட்டுமில்ல டிவிஎஸ்...இந்த பஜாஜ் சன்னி...இதெல்லாம் கூட ஓட்டச் சொல்லித் தரலாமே ப்ரீயா இருக்கச்சே ஆத்துக்கு அழைச்சுண்டு வா மாலு.."

"ஆமா ஆமா வைத்தி அண்ணன் பெரிய ரேஸ் பைக் டிரைவர்....ஆறு கண்டம் போய் அறுநூறு ரேஸ் ஜெயிச்சுட்டு வந்துருக்கார்...உங்களுக்கு எல்லா வண்டியும் ஓட்டச் சொல்லித் தருவார்... சைக்கிளை வாங்குன நாள்ல்ல இருந்து இன்னி வரைக்கும் முழுசா குரங்கு பெடல் ஒழுங்காப் போட்டது இல்ல...மொக்கச்சாமி இன்னிக்கு என்ன வெளம்பரமாப் பேசுறான் பாருய்யா" வழக்கம் போல எனக்குள்ள என் மன வாய்ஸ் கேட்டது...தேவதை...தேவதை...எக்குத் தப்பா எதுவும் பேசக் கூடாதுன்னு அமைதியாவே நின்னேன்...

அவ என்னடான்னா என்னைத் திரும்பிக் கூடப் பாக்கல்ல வைத்தி என்னவோ பெரிய விஞ்ஞானி மாதிரியும் அவன் விடுற ரீல் எல்லாத்தையும் எதோ புதிய பூகோளத் தத்துவம் மாதிரியும் அப்படி கவனிச்சுக் கேட்டுட்டு இருந்தா....எனக்கு அதுக்கு மேலயும் பொறுக்கல்ல...

"ஏரிக் கரை பூங்காற்றோ ....." பாட்டை மெதுவா விசிலடிக்க ஆரம்பிச்சேன்.... அப்பவும் அவக் கவனிக்கல்ல..சரின்னு கொஞ்சம் வால்யூம் ஏத்தி அடிக்க ஆரம்பிச்சேன்....

"சீ பொறுக்கி...." அப்போ பாத்து அந்தப் பக்கம் வந்த அடுத்த வருச உலக அழகி போட்டிக்கு அப்போக் கிளம்புன எங்க உள்ளூர் குமரிக இரண்டு நான் அதுகளைப் பாத்து தான் விசிலடிச்சேன்ங்கற நினைப்புல்ல என்னத் திட்டிட்டுப் போனாளுக... அந்தத் திட்டு மூக்களகி காதுல்ல விழுந்திருந்தாக் கூடப் பரவாயில்ல... அவ..அதான் தேவதைக் காதுல்ல விழுந்து தொலைச்சிருச்சு...

மூக்களகிக்கு மூக்கு முட்டச் சிரிப்பு... அப்படி சிரிச்சா...பாக்க பயங்கரமா இருந்துச்சு... இவளும் சிரிச்சிருந்தாப் பரவாயில்ல... ஆனா ஒரு மாதிரியாப் பாத்தாளே பாக்கணும்... விசிலை முழுங்கன மாதிரி என் முகம் ஆயிடுச்சு...

"சரி நாங்க கிளம்புறோம்...லேட்டாரது...நீ கிளம்பி ஆத்துக்குப் போய் உன்னையும் யாராது பொறுக்கிக் கூட்டத்தோடச் சேத்துடப் போறா..." மூக்களகி வெற்றி களிப்பில் சைக்கிள் ஏறினாள் கூடவே என் தேவதையும் போனாள்...

"வைத்தி மவனே..உன் தொங்கச்சிக்கு ஒரு நாள் இருக்கு.. மூக்குல்ல மூணு ஆணி அடிக்கப் போறேன் பாரு...."

"விடுரா..சின்ன வயசுல்ல இருந்தே உனக்கும் அவளுக்கு ஆகரதுல்ல...இது என்ன புதுசா?" வைத்தி சைக்கிள் போற திசையில்ல இருந்து இன்னும் கண்ணை எடுக்காமலே என்கிட்டச் சொன்னான்.

"அதுக்குன்னு இன்னொரு பொண்ணு முன்னாடி....இப்படி பண்ணுறது நல்லா இல்ல...."

"ச்சே விடு மாப்பி...அவளும் நம்மாத்து பொண்ணு தான்....அப்படி எல்லாம் உன்னைத் தப்பா நினைக்க நான் விட்டுருவேனா..."

"உங்காத்துப் பொண்ணுன்னா..உனக்குச் சொந்தமா..."

"சொந்தம் மாதிரின்னு வச்சுக்கலாம்...அவ பேர் ரஞ்சனி...ஊர் தில்லி...அப்பாவுக்கு மத்திய அரசாங்கத்துல்ல உத்தியோகம்..ப்ளஸ் டூ முடிச்சிருக்கா... ஐ.ஐ.டிக்கு என்டரண்ஸ் எழுதியிருக்கா...நன்னாப் பாடுவா...பரதம் தெரியும்..சமையல்ல ஒரளவு தெரியுமாம்...எரோனாடிக்கல் படிக்கணும்ன்னு லட்சியமாம்...இப்போ நம்ம ஊருக்கு லீவுக்கு வந்துருக்கா....வீடு கூட கட்டின்டு இருக்கா உங்காத்துப் பக்கத்துல்ல..அது அவ அப்பா ரிட்டையர் ஆனப் பிறகு செட்டில் ஆரதுக்காம்.."

"வைத்தி மவனே இவ்வளவு விசயம் தெரிஞ்சு வச்சுருக்கே..எப்படிடா?"

"நம்ம மனசுக்குப் பிடிச்சவாளைப் பத்தி தெரிஞ்சுக்கறதுல்ல என்னடா கஷ்ட்டம்"

வைத்தி சொன்னது சரக்குன்னு நடு நெஞ்சுல்ல அரிவாள் எடுத்து கோடு போட்ட மாதிரி எரிஞ்சது...

"டேய் வைத்தி மவனே....நான் காதல் பத்தி உன் கிட்டப் பேசுனது எல்லாம்..."

"ஆமாடா மாப்பி... காதல் ஒரு போதை தான்....இப்படி ஒரு பொண்ணு கூட இருந்தா வாழ்க்கை முழுக்க அந்த போதையிலே இருந்துடலாம்டா.... சரி தானே..." நான் சொல்ல வந்த விசயத்தை வைத்தி சொன்னான். அதை வேற ரொம்ப ரசிச்சு கண்ணை எல்லாம் மூடி நெஞ்சுல்ல கை வைச்சு சிலாகிச்சுச் சொன்னான்...

"வைத்தி அந்தப் பொண்ணை நான் லவ் பண்ணுரென்...."

நான் சொன்னதை வைத்தி காதில்ல வாங்குன மாதிரியே தெரியல்ல... ரெண்டு கையையும் நெஞ்சுல்ல வஎய்ச்சுகிட்டு ரொம்ப ரொமான்டிக்கா முகத்துல்ல சிரிப்பை எல்லாம் வர வச்சுகிட்டு காதலுக்கு மரியாதை விஜய் மாதிரி போஸ் கொடுத்துகிட்டு இருந்தான். நான் செமக் கடுப்பாயிட்டேன்.

"டேய் வைத்தி மவனே... நான் சொன்னது கேட்டுச்சா..அந்தா அந்த சைக்கிள்ல்ல உன் தொங்கச்சி மூக்களகி கூடப் போறாளே அந்தப் பொண்ணை நான் லவ் பண்ணுறேன்... நீ வேற நல்ல பொண்ணைப் பாத்து லவ் பண்ணிக்கோ நானே வேணும்ன்னா உன் லவ்க்கு உதவி பண்ணுறேன்.. இப்போ போஸ் கொடுக்கறதை நிறுத்திட்டு இறங்கி வா..."

நான் கொஞ்சமும் எதிர்பாக்காத மாதிரி வைத்தி பக பகன்னு சிரிக்க ஆரம்பிச்சான்...

"மாப்பி நீ என்ன லூசாடா... நான் தான் அவளை லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டேன்ல்ல.. அப்புறம் வந்து.... இப்படி பேசுற..போ..போய ஆத்துல்ல போய் நான் கொடுத்த தம் நன்னா இழுத்து விட்டு யோசி...உனக்கே புரியும் அவளுக்கு நான் தான் சரின்னு..."

"டேய்...மவனே வைத்தி...வெளையாடதே...நான் சீரியசாச் சொல்லுறேன்....அவளை நான் தான் லவ் பண்ணுறேன்... வம்பு பண்ணாதே சொல்லிட்டேன்..."

"மாப்பி..பொண்ணு எங்க ஆளுங்க... புரியுதா..... வீணா வேல் கம்பு வீச்சரிவாளுக்கு உன் உயிரைக் கொடுத்துராதே...உங்க ஆளுங்க பக்கம் எதாவது பொண்ணு இருந்தாச் சொல்லு நாங்க ஜோடியா வந்து உதவுறோம்...." வைத்தியின் நக்கல் என்னைச் சுள்ளுன்னு தாக்கிச்சு,,,


வைத்திக்கு யோசிக்கக் கூட நேரம் கொடுக்காம அவன் மீது மேகமாப் பாய்ஞ்சேன்.. கொத்தா அவன் சட்டையைப் பிடிச்சு கீழே தள்ளுனேன்.... மண்ணுல்ல நானும் அவனும் உருண்டோம் புரண்டோம்.... அவன் மேல் உதடு கிழிஞ்சு ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது... விடாமல் நானும் வனை அடித்தேன்....வைத்தி எம பாதக பைய அடிக்கக் கூடாத இடத்துல்ல சட்டுன்னு முட்டியை வச்சு எத்திட்டான்...

அவ்வளவு தான் குடல் மொத்தமும் வாய் வழியா வந்துரும் போல வலி பொங்கியது... சத்தம் கூடப் போட முடியாமல் முழங்கால் போட்டு உட்கார்ந்தேன்...

நிமிர்ந்து பார்த்தால் மூக்களகி பக்கத்தில் தேவதை....


"சேராதன்னு சொன்னாக் கேக்குறீயா..முரட்டுத் தனமா அடிச்சு இருக்கான் மாட்டுப் பைய...." மூக்களகி வைத்தியின் காயத்தை பார்த்து பரிசோதனைச் செஞ்சுட்டு இருந்தா...

வைத்தி அப்பாவியா மூஞ்சை வச்சிகிட்டு நின்னான்...உதட்டுல்ல வழிஞ்ச ரத்தம் வேற நல்லாவே அவனுக்கு வேலை செஞ்சது... என் மெய் வலியை வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் முக்கு முனகிட்டே எழுந்து நின்னேன்...

அப்போ என் தேவதை கையில் ஒரு வெள்ளை கைக்குட்டை இருந்துச்சு... அந்த கைக்குட்டையாலே அவளே வைத்தியோட உதட்டு ரத்தத்தைத் துடைச்சு விட்டா...

அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு 'அங்கே" அடிப்பட்டதை விட மனசுல்ல ஆயிரம் மடங்கு வலிச்சுது... வைத்தி என்னைப் பாத்து பரிகாசமாப் புன்னகைத்தான்....நடக்கக் கூட முடியாமல் ஒரு மாதிரி நின்னுட்டு இருந்தேன் நான் அவங்க மூணு பேரும் அங்கிருந்து போவதைப் பாத்தப் படியே...

இன்னும் வாசம் வீசும்

தென்கிழக்கு வாசமல்லி - 2

தென்கிழக்கு வாசமல்லி - 1

ஒரு மூணு மாசமிருக்கும் வீடு ஒரளவு வளர ஆரம்பிச்சுருச்சு...வேலை ஜரூராக நடந்துகிட்டுருச்சு...ஒரு நாள் மதிய நேரம் பொழுது போகாமல் பக்கத்து வீட்டு கட்டுமான வேலைகளை வேடிக்கைப் பாத்துக்கிட்டே நம்ம மரம் பக்கம் வந்து ஒதுங்குனேன்..உணவு முடிச்ச வேலையாட்கள் அப்போது தான் வேலைக்குத் திரும்பிக்கிட்டிருந்தாங்க. சிலோன் ரேடியோவில் பாட்டு ஓடிக்கொண்டிருந்துச்சு....இடைஇடையே அறிவிப்பாளர் அப்துல் அமீதின் குரலில் தேன் ஈழத் தமிழ் வந்து காதில் பாய்ஞ்சிட்டு இருந்துச்சு

அக்கம் பக்கம் பார்த்து விட்டு பொந்துக்குள் கைவிட்டு ஒரு பேப்பரில் சுத்தியிருந்த அந்தப் பொருளை எடுத்துப் பிரிச்சேன்...உள்ளே புத்தம் புது 555 சிகரெட் பாக்கெட் கண்ணைக் கவர்ந்தது..


வைத்தியைச் சும்மாச் சொல்லக்கூடாது.. சொன்ன மாதிரியே சரக்கைக் கொண்டு வந்துட்டான்..அவங்க மாமா துபாய்ல்ல இருந்து வந்துருக்கார்...வரும் போது பல வகை வஸ்துகளோடு வந்ததாகவும் அந்த வஸ்துகளில் சிலவற்றை எங்களுக்கும் பங்கு தருவதாய் வைத்தி வாக்கு கொடுத்திருந்தான்... அந்த வகையில் எனக்கு கிடைத்தப் பங்கைத் தான் நான் உள்ளங்கையில் வைத்து ரசிச்சுகிட்டு இருந்தேன்....பாக்கெட்டே எவ்வளவு கிக்கா இருக்கா... சிலாகிச்சிட்டு இருந்தேன்...

பாக்கெட்டை உள்ளங்கையில் வைத்து தேய்ச்சேன் அப்படியே மெதுவா சிகரெட்டை எடுத்து உதட்டில் வச்சு பத்த வைக்காமல் கொஞ்ச நேரம் திரும்பவும் கண்களைச் சுத்த விட்டேன்...பக்கத்து காம்வுண்டில் பீடி பிடிச்சிட்டு இருந்த கொத்தனாரிடம் நெருப்பு கடனாய் வாங்கி பத்த வச்சிக்கிட்டு ஒரு கையைத் தலைக்குப் பின்னால் வைத்து மரத்தில் சாய்ஞ்சு நின்னேன்..புகையை ரசிச்சு ருசிச்சு தலைக்கு மேலே விட்டேன்..

அடுத்து நீங்கள் கேட்கவிருக்கும் பாடல் தாவணிக் கனவுகள் படத்தில் இருந்து..ஏரிக்கரை பூங்காற்றே என்ற பாடல் வருகிறது...கேட்டு ரசியுங்கள்.... அப்துல் ஹமீத் சொல்லிமுடிக்கும் போது..காற்றில் அசைந்த எதோ ஒண்ணு என் தோள் மேல விழுந்துச்சு..அதை அப்படியே என்னன்னு கூட பாக்கமால் ஒதுக்கி விட்டுட்டு சிகரெட் சுகத்தில் நான் லயிக்க முயற்சித்தேன்..ஆனால் திரும்பவும் என் தோள் மீது அதே பொருள் வந்து விழுந்துச்சு...இந்த முறை என்னன்னு பாக்கத் திரும்புனேன்..

முளைச்சு காத்துல்ல பறக்க கிளம்பிடிருந்த நம்ம மல்லிச்செடி தான் என் தோளைத் தொட்டு துழாவிக்கிட்டே இருந்துருக்கு...கொடின்னா படரக் கொம்பு வேணுமே..அதான் என் மேல படர முயற்சி பண்ணியிருக்கு... தென்கிழக்கு வாசமல்லி...என்னைத் தேடி ஒரு சேதி சொல்லி... ரேடியோ பாட்டுக் கூட நானும் ஒரு ராகத்தைச் சேர்த்து முணுமுணுத்துகிட்டே மல்லி செடிக்கு ஒரு கொழு கொம்பு தயார் பண்ணி முடிச்சேன்... நம்ம மரத்துல்ல கொம்பை லேசா சாய்ச்சு கொடியை படர்த்தி விட்டுட்டு.... மிச்சமிருந்த சிகரெட்டை ஊத திரும்புனா.. வெளியே போன அம்மா வீட்டுக்குள் நுழையறது கண்ணுல்ல பட்டுச்சு.. சிகரெட்டை எங்கே எறியறதுன்னு தெரியாம...அவசரத்துக்கு நம்ம பாதுகாப்பு பெட்டகமானப் பொந்துக்குள்ளே தூக்கிப் போட்டேன்...வாடை போறதுக்கு காத்துல்ல கையை ஆட்டிகிட்டு இருந்தேன்...

என்னோட கெட்ட நேரம் அம்மா நான் இருக்கும் இடம் நோக்கியே வந்துட்டு இருந்தாங்க...எனக்கு லேசா புரையேறி இருமல் வந்துச்சு...என்னைத் தாண்டி அம்மா போகும் போது தான் எனக்குப் பின்னாடி அவ நிக்கறதையே நான் கவனிச்சேன்...அம்மா கையில் இருந்த எதோ ஒரு பொருளை அவகிட்டக் கொடுத்துட்டு என்னமோ பேசிகிட்டு இருந்தாங்க...காதை நீட்டி கேட்டும் ஒண்ணும் சரியா விழல்ல..

இவ்வளவு நேரம் நான் இங்கே நின்னப் போது அவ என் கண்ணுல்ல படவே இல்லை..இப்போத் தான் வந்துருப்பாளோ...இல்ல நான் தம் மயக்கத்தில் அவளைக் கவனிக்கல்லயே.... ச்சே தம்மை விட அவளோட அருகாமை தர்ற போதை இருக்கே...அதுவல்லவா சுகம்...அப்படியிருக்க அவ பத்தடி தூரம் வந்தாலே என் ஆண்மனம் அலை பாயுமே...பின்னாடியே இருந்திருந்தாக் கவனிக்காம விட்டிருப்பேனா ..வாய்ப்பே இல்ல...இப்போத் வந்துருக்கணும் எனக்கு நானே சமாதானம் சொல்லிகிட்டு நின்னேன்..

"ம்ம்ம் எதோ புகையிற வாடை வருதே..." அம்மாவோட குரல் என்னை என் யோசனை உலகத்தில் இருந்து இழுத்துக் கொண்டு வந்து வெளியே போட்டுது...

"ஆமா...ஆன்ட்டி...ம்ம்ம் அதோ அந்த இடத்தில்ல இருந்து தான் புகை வருது...." அவள் கைக் காட்டுன இடம்..மிகச் சரியா என் ரகசிய உலகத்தின் நுழைவாயிலே தான்.... கை நீட்டுனது மட்டுமில்லாமல்...சட்டுன்னு நான் ஒரு நிலைக்கு வந்து நடக்கிறது என்னன்னு நான் உகிக்கறதுக்குள்ளே..கட்டுமான இடத்தில்ல இருந்து ஒரு குடம் தண்ணியை எடுத்துட்டு வந்து மின்னல் வேகத்தில்ல பொந்துக்குள்ளே ஊத்தியும் விட்டுட்டா...

நான் மென்னு முழுங்கி அப்படியே அடி வயித்துல்ல சுருண்ட பயப்பந்தை வெளியே தள்ள முடியாம அடுத்து என்ன நடக்குமோன்னு சிலையாகி நின்னுட்டு இருந்தேன்...

யாரோ சிகரெட் புடிச்சுட்டு மரத்துல்ல போட்டுருக்காங்க ஆன்ட்டி...அதை அணைக்காமலே போட்டிருக்காங்க போலிருக்கு...அதான் தீ புடிச்சிருக்கு...
எந்தக் கிறுக்குப் பைய புத்தி இப்படி போச்சு...மரத்துல்ல கொண்டு கொள்ளியை போட்டிருக்கான்..வெத்து பைய..... என்னைப் பெத்த அம்மா சொன்னதுல்ல கொஞ்சத்தை மட்டுமே என்னால இங்கே சொல்லமுடியும்.. அம்மா மொத்தமும் சொல்லி முடிக்கும் வரை அவ என்னை ஒரு நமுட்டு பார்வை பார்த்தாப் பாருங்க....உங்க அம்மா சொல்லுறது எல்லாமே சரிடா.... நீ அப்படித் தான்ன்னு பார்வையாலே அவளும் அம்மாப் பேச்சுக்குப் பின்பாட்டு பாடுற மாதிரியே எனக்குத் தோணுச்சு...

"இது எல்லாம் இங்கே வேலை செய்யற பையல்வ வேலையாத் தான் இருக்கும்... உங்க வீட்டாளுக கிட்ட சொல்லி வைம்மா" அம்மா இதைச் சொல்லிகிட்டு இருக்கும் போது எனக்கு சிகரெட் பத்த வைக்க நெருப்பு கொடுத்த புண்ணியவான் அங்கு பீடி பிடிக்க வந்துகொண்டிருந்தார்..

சனியன் சரவெடி கொளுத்தி சட்டைக்குள்ளே வச்சுட்டு அது வெடிக்கறதை வேடிக்கை பாக்காமப் போவாது போலிருக்கே....

அம்மா வாம்மா..ஒரு காபித் தண்ணி போட்டு கொடும்மா...அதான் நெருப்பை அந்த புள்ள அணைச்சுருச்சுல்லா....விடு நான் பாத்துக்குறேன்.... அம்மாவை கையைப் பிடிச்சு இழுக்காத குறையா நான் வீட்டுக்குள்ளே போக வைக்க நான் முயற்சி பண்ணிட்டு இருந்தேன்...

"மேஸ்த்திரி அண்ணேன்..இங்கே வந்து இனிமே சிகரெட் பிடிக்கக் கூடாது...யாரோ சிகரெட் பிடிச்சுட்டு இந்தப் பொந்துக்குள்ளே பாதியிலே பயந்து வீசியிருக்காங்க...அது தீ பிடிச்சிருச்சு...." அவள் பொறுமையா ஆனா ரொம்ப சத்தமாவும் கதையைச் சொல்லிட்டு இருந்தா...அப்பப்போ என்னை ஒரு கேலி பார்வையும் மெல்லிய சிரிப்புமா வேற பாத்துகிட்டே சொன்னா...

"அம்மா இது காசுக்கார ஆளுக பிடிக்க சிகரெட்ல்லா.. நமக்கு எல்லாம் பீடியே சாஸ்திம்மா...இருந்தும் நீங்க சொல்லிடீயே இனி இந்தப் பக்கம் நம்ம ஆளூக யாரும் பீடி சிகரெட் பிடிக்காம பாத்துகிடுதேன்....மத்த ஆளுக திருட்டு பீடி பிடிக்க வராம அந்த வீட்டு ஆளுகளை பாத்துகிடச் சொல்லுங்க... பீடி பிடிக்கோம்ன்னு வீட்டை எரிச்சிரப் போறான்வ..." மேஸ்த்திரி என்னை ஓரப் பார்வை பாத்துக் கொண்ட பீடி பிடிக்க வேறிடம் தேடிக் கிளம்பினார்..

ஒரு வழியா அடிக்க இருந்த புயல் அமைதியாக் கரையக் கடந்த மாதிரி இருந்துச்சு...ஸ்ப்ப்ப்ப்ப்பா...அப்படின்னு மெதுவா ஒரு பெருமூச்சு விட்டுகிட்டேன்... அவ ரொம்ப நிதானமா வந்து கொஞ்சம் எட்டி பொந்தைப் பார்த்தா....

"ம்ம்ம் எல்லாம் காலி....கண்ட கண்ட புக்....திருட்டு சிகரெட்....ஒண்ணும் மிஞ்சல்ல....ஒரு அழகான செடி வளர்ற இடத்துல்ல இந்த விளங்காதப் பொருள் எல்லாம் இருக்குதுன்னே யோசிச்சேன்...சொந்த செலவுல்ல அதை எல்லாம் அகத்திக் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்...அப்புறம் உங்க அம்மா சொன்னது புரியுதா... இனிமே இங்கே நோ சிகரெட்... இப்போதுல்ல இருந்து இந்த இடம் மரம் எல்லாம் என் மல்லிச் செடிக்கு மட்டுமே சொந்தம்... புரியுதா...."

சடையை என் முகத்துல்ல படுற மாதிரி விசிறி அடிச்சுட்டு நடந்துப் போனா...

அந்த நிமிசத்தில்ல எந்த ஒரு மனுசனுக்கும் வர வேண்டிய நியாயமானக் கோபம் கூட எனக்கு அவ மேல வர்றல்ல..அது ஏன்ன்னு எனக்கு சுத்தமாப் புரியாம மரத்துல்ல சாய்ஞ்சுட்டு நின்னேன்....

என்னையுமறியாமல் தென்கிழக்கு வாசமல்லி பாடலை என் வாய் முணுமுணுத்தது

வாசம் இன்னும் பரவும்

தென்கிழக்கு வாசமல்லி - 1

கிட்டத்தட்ட பன்னிரெண்டு வருச இடைவெளிக்குப் பின்னாடி நெல்லைச் சீமைக்கு வர்றேன்....சொந்த பூமி காத்துக்குன்னு ஒரு தனி சுகம் இருக்கத் தான் செய்யுது... ஒரு ஊரை விட்டு மறு ஊருக்குப் பிழைக்கப் போன எல்லாருமே இதை ஒத்துப்பாங்க...


பஸ் பயணம் அலுப்பா இருந்தாலும் தாமிரபரணி ஆத்து மணலைப் பார்த்ததும்... ஒரு சின்ன சிலிர்ப்பு அதுவா எனக்குள்ளே வந்துருச்சு... முன்ன எல்லாம் தண்ணி இருந்தது... இப்போவெல்லாம் மண்ணாவது இருக்கேன்னு சந்தோசப் பட வேண்டியது தான் போலிருக்கு...

ஹைகிரவுண்ட் எல்லாம் தாண்டி அப்படியே நடந்தே வீடு வரைக்கும் போனேன்... கையிலே அதிகமான சுமை இல்ல... போகும் போதே ஊரையும் வீதியையும் வேடிக்கைப் பாத்துகிட்டே போனேன்.. ஊருக்கும் எனக்கும் இடைவெளி அதிகமாகி போயிருந்தது புரிந்தது...பழைய அடையாளங்கள் பல இடங்களில் மாறி போயிருந்தது...ஒத்தையும் இரட்டையுமாய் அங்கொண்ணும் இங்கொண்ணுமா இருந்த காமராஜ் நகர் குடியிருப்பில் இப்போ ஏகத்துக்கும் வீடுகள்...மாடி வீடு மாடல் வீடுன்னு நகரத்து வாச்னை வீசியது...

இந்த மாற்றங்களிலும் அதிகம் மாறாமல் எங்கள் வீடு...மாற்றுவதற்கு அவசியமும் இல்லை... ஒரே பையன் நான் ஊருக்கு வருவதே இல்லை... அப்பாவுக்கும் அம்மாவுக்கும் போதுமான வசதிகளோடு வீடு அமைந்து விட்டது... கடைசியாய் என் கல்யாணத்துக்கு வீட்டை அலங்கரித்திருக்க வேண்டும் அதுக்கும் நான் இடம் கொடுக்கவில்லை.. லவ் மேரேஜ் இல்ல பண்ணிகிட்டேன்.. அதுவும் இரண்டு வீட்டையும் எதிர்த்து...அப்புறம் வெளிநாட்டுக்கு போய் அங்கேயே முதல் பையன் பிறந்து... பின்னாடியே ஒரு பொண்ணும் பெத்து... ஒரு வழியா இரண்டு வீட்டோடும் சமாதான உடன்படிக்கை போடுறதுக்கே வருசம் அஞ்சாகிடுச்சு...


அப்புறம் அப்படி இப்படி சில்லரை சேகரிப்பில் தேசாந்திரியாய் திரிஞ்சு சென்னை தான் நம்ம ஜாகைன்னு முடிவு பண்ணி இதோ ஒரு வருசம் ஆகிருச்சு...இப்படி எத்தனையோ காரணங்கள் ஊருக்கு நான் வராமல் போவதற்கு...ம்ம்ம் இப்போ நிச்சயமா வர வேண்டிய காரணம் அமைஞ்சுப் போச்சு...


அப்பாவுக்கு உடம்பு முடியல்ல.... எவ்வளவோ போன்ல்ல சொல்லியும் கேக்கல்ல.. சென்னையிலே நல்ல வ்சதி இருக்கு பாத்துக்கலாம் வாங்கன்னு கேட்டுப் பாத்தேன்.. கெஞ்சிப் பாத்தேன்...

ம்ம்மென் வீட்டு வாசல் மிதிக்காத பையன் வீட்டுக்கு நான் வந்து போனதே என் பேரப் பிள்ளைகளுக்காகத் தான்... அவன் வீட்டுல்ல கிடையா கிடந்து வைத்தியமெல்லாம் நான் பாக்க மாட்டேன்... எங்க அப்பா கிட்ட இருந்து தான் எனக்கும் வைராக்கியம் பிடிவாதம் எல்லாம் வந்துருக்கும்ன்னு யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை... ஆபிஸ்க்கு லீவ் சொல்லிட்டு பஸ் பிடிச்சுக் கிளம்பிட்டேன்... ஒரு இரண்டு நாள் கழிச்சு என் மனைவியும் பிள்ளைகளூம் ரயிலில் வர மாதிரி டிக்கெட் போட்டுக் கொடுத்துட்டேன்... என்னாலே முடியல்லன்னா அவ வந்து எப்படியாவது அப்பாவை சென்னைக்குக் கூட்டிட்டுப் போறதுன்னு திடமான முடிவு. எடுத்தாச்சு..

வீட்டு வாசலுக்கு வந்து நின்னவுடன் பூத்துக் கிடந்த பூரசு மரம் என் மொத்த கவனத்தையும் இழுத்துப் போட்டது...
என்னைப் பார்த்த உடனே அதுக்கு என்னை அடையாளம் தெரிஞ்சுப் போச்சு.... காத்துல்ல அதுவும் சேர்ந்து கொஞ்சம் வேகமாவே கிளைகளையும் இலைகளையும் அசைச்ச மாதிரி இருந்துச்சு...அதில்ல மிச்சமிருந்த பனித்துளிகளை எல்லாம் என் மேலே வாறி இறைச்சு வரவேற்ற மாதிரி எனக்குப் பட்டுச்சு.. அந்த பனித்துளிகளை துடைக்க மனம் வரவில்லை.. மெதுவா பூரசு மரத்துக்கு கிட்டப் போய் நின்னு ஒரு பழைய நண்பனை பல வருசம் கழிச்சுப் பார்த்தா நெஞ்சோடு தழுவுக்குவோமே அதே மாதிரி பூரசு மரத்தை தோளோடு அணைத்தேன்... மரத்தில் இருந்த குருவிகள் கீச்சு கீச்சு எனக் கத்தின... மரம் இன்னும் கொஞ்சம் பாசத்தோடு அசைந்தது...மரத்தின் வலப்புறத்தில் இருந்த அந்தப் பொந்து இன்னும் அதே அளவில் இருந்தது என் கண்ணில் பட்டது...

"எய்யா...எப்போ வந்தா...." அம்மாவின் குரல் என்னை மரத்தின் நினைவுகளில் இருந்து விடுவித்து வெளிகொண்டு வந்தது...

அப்பாவைப் போய் பார்த்தேன்... கொஞ்சம் தளர்ந்து தான் போயிருந்தார்...வார்த்தைகள் மெதுவாகத் தான் வெளியே வந்தன... பேசிக்கலாம் இப்போத் தானே வந்து இருக்க...அப்படின்னு அம்மா அப்போதைக்கு அணைப் போட்டு கையில் காபி தம்பளரை கொடுத்தாள்...
கருப்பட்டி காப்பி...ஸ்ஸ்ஸ்...ஆர அமர ருசித்து குடிக்க ஏத்த இடம் நம்ம பூரசு மரத்தடி பக்கம் தானே... எத்தனை ஆண்டுகால பழக்கம்...ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் அந்த சுகத்தை அனுபவிக்க மனம் அலைந்தது...

மரத்தடியில் போய் நின்று பக்கத்து காம்பவுண்டை எட்டிப் பார்த்தேன்...அந்த பெரிய வீடு அப்படியே இருந்தது...அங்கு நிறைய சிறூவர்கள் விளையாடி கொண்டிருந்தார்கள்...அவர்கள் விளையாட்டில் கொஞ்சம் நேரம் லயித்து நின்றேன்...இப்படித் தானே நாமும் ஒரு காலத்தில் இருந்த்தோம்.. அந்த நினைப்பே இனிமையாக இருந்தது..

இப்போக் கூட அந்த பெரிய வீடு கட்ட ஆரம்பித்த நாள் எனக்கு நல்லா நினைவிருக்கு... பொங்கல் முடிஞ்ச நேரம்...வழக்கம் போல ஒரு கையில் கருப்பட்டி காப்பியும் மறுகையில் தினந்தந்தி பேப்பரும் வச்சிக்கிட்டு பூரசு மரம் பக்கம் வந்து நின்னேன்... சிந்துபாத் லைலா கன்னித்தீவுல்ல அன்னிக்கு என்னாச்சுன்னா பாத்துட்டு..அப்படியே சாணக்கியன் சொல்லையும் படிச்சுட்டு...தலையைத் தூக்குன்னா...பக்கத்து காம்பவுண்ட்ல்ல ஒரு பெரிய கார்...கான்ட்டசான்னு ஞாபகம் வந்து நிக்குது...காரிலிருந்து இரண்டு வேட்டி கட்டிய பெரியவர்களும்..கூடவே மடிசார் கட்டிய மாமிகளும் இறங்கி நடந்துப் போய்கிட்டு இருந்தாங்க.. அந்த நிமிசம் அவங்களுக்குப் பின்னாடி நடந்ததை நான் கவனிக்கல்ல....

ஆனா சலக் சலக்ன்னு கேட்ட கொலுசு சத்தம் என்னைத் திரும்ப வச்சுடுச்சு.. ஒரு சின்ன இடைவெளி விட்டு...ஒரு பொண்ணு....அப்பாடா...மின்னல் கொடி மின்னல் கொடின்னு அப்படின்னு எதோ நாவல்ல எல்லாம் படிச்சுத் தான் இருக்கேன்.. அன்னிக்குத் தான் பார்த்தேன்...சும்மா அந்த சடையை அப்படித் தலையைச் சுத்தி போட்டாப் பாருங்க..கருப்பட்டி காப்பி என் கையிலே இருந்து தெறிச்சுருச்சு...

கண்ணு இமையா இல்ல அது பட்டாம்பூச்சி இறக்கையா... அது துடிக்கிற துடிப்புல்ல இங்கே பாத்த என் இதயம் வெடிக்கவே ஆரம்பிச்சுருச்சு.... பட்டுப் பாவாடைத் தாவணியிலே குத்தால அருவி அங்கே மலை விட்டு இறங்கி வந்த மாதிரி அப்படி ஒரு துறுதுறுப்பு...போகிற போக்கில் அப்படியே பூரசு மரம் பக்கம் ஒரு பார்வையை சிதற விட்டுட்டு சிறகடிச்சு போயிட்டே இருந்தா...நான் மரத்தைச் சுத்தி சுத்தி அந்தப் பார்வை விழுந்த இடத்தைத் தேடி ரணமாகிப் போனேன்..
அந்த நேரம் பார்த்து காலை நேயர் விருப்பத்தில் ஒரு பாட்டு போட்டாங்க...நல்லாவே ஞாபகம் இருக்கு... ஏரிக்கரை பூங்காற்றே நீ போற வழி தென்கிழக்கா.. தென்கிழக்கு வாசமல்லி....ராஜாவின் இசைக்கு அடிமையாக ஆரம்பித்திருந்த காலக்கட்டமது..

"சரி உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கணுமா...இல்ல கான்டீன்ல்ல பாத்துக்க்குறீயா..."
இதைக் கேக்க வந்த அம்மா அங்கே பக்கத்துல்ல நடக்கற சடங்குகளை எல்லாம் பாத்துட்டு அப்படியே கதையை வேற பக்கம் ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்க..எனக்கும் கொஞ்சம் தேடாமலேத் தகவல் வந்து சேர்ந்துருச்சு...

புதுசா வீடு கட்டப் பூஜை பண்ணுறாங்கப் போல... பெரிய ஆபிசராம்டா..தில்லியிலே இருக்காவளாம்..சொந்த ஊர்ல்ல பூமி வேணும்ன்னு வீடு கட்டப் போறாவளாம்...ஒரே பொண்ணாம்..ஒரு பையனாம்...பொண்ணு இப்போத் தான் காலேஜ் சேரப் போவுதாம்...எங்களுக்கும் பக்கத்து காம்பவுண்டுக்கும் ஒரு வேலி மட்டுமே இடையில் இருந்தது..
அந்த வேலியோரம் தான் பூரசு மரமும் நின்னுச்சு..அதுக்கடியிலே நின்னுகிட்டு அம்மா சொன்னத் தகவலை எல்லாம் உள் வாங்கிகிட்டேன்..

சரி சாப்பாடு...அம்மா மறுபடியும் கேக்க..

இன்னிக்கு நான் காலேஜ் போகல்ல..கொஞ்சம் மேலுக்கு சரியில்லதா மாதிரி இருக்கு...திடீரென முகத்தை தொங்கப் போட்டுட்டுச் சொன்னேன்...
அம்மா என்னை மேலும் கீழும் பார்த்தாள்...கட் அடிக்க இப்படி ஒரு காரணமா... அப்படின்னு அம்மா கேட்பது போல் இருந்தது..அம்மா போய் வெகு நேரம் வரை நான் அங்கேயே இருந்தேன்...

இன்னும் ஏரிக்கரை பூங்காற்றே பாட்டு காற்றில் மிதந்து வந்து கொண்டே இருந்தது...இந்த முறை பாட்டு கான்ட்டசா கார் டேப் ரிக்கார்டரில் இருந்து வந்துக் கொண்டு இருந்தது...

பூரசு பொந்தில் இருந்து அந்த வார பிலிம் பேர் எடுத்து ஒரு ஓரமாய் உட்கார்ந்து புரட்ட ஆரம்பித்தேன்..நடுப்பக்கத்தில் ஷில்பா ஷெட்டியின் கவர்ச்சிப் படம் ..அதையே அப்படி இப்படி பார்த்துக் கொண்டிருந்ததில் பக்கத்தில் ஆள் வந்து நின்றதை கூட நான் கவனிக்கவில்லை...

பிலிம் பேர் எல்லாம் அந்தக் காலத்தில் வீட்டில் தடைச் செய்யப் பட்ட புத்தகம்..வீட்டில் தடை விதிக்கப்படும் எந்த பொருளுக்கும் அடைக்கலம் கொடுப்பது என் நண்பன் பூரசு மரத்தின் பல ஆண்டு காலமாய் எனக்கு செய்து வரும் உதவி...அதற்கு எனவே தனக்குள் ஒரு தனி பெட்டகமே திறந்து கொண்டவன்...ஊர் பார்வைகு அது வெறும் பொந்து அவ்வளவே...

"தம்பி..." குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தேன்...மடிசார் மாமிகளில் ஒருத்தர் என் பக்கம் நின்று கொண்டிருந்தார்..கையில் எதோ பழம் வகையறா...இருந்த ஒரு தட்டு இருந்தது...அம்மா அதற்குள் அங்கு வந்து விட்டாள்..பரஸ்பர அறிமுகம்..அப்படியே அம்மாவும் மாமியும் பேச்சு வார்த்தை எனப் பழக ஆரம்பித்து விட்டனர்..

"மல்லிகைச் செடின்னா இவளுக்கு அப்படி ஒரு ஆசை.. அதான் சொந்த வீடுன்னுதும் முதல் வேலையா ஒரு செடியைக் கொண்டு வந்துட்டா... "மாமி அம்மாவிடம் சொன்னது எதேச்சையாக காதில் விழுந்தது...

அவளும் அங்கேத் தான் பக்கத்தில் மண்ணைப் போட்டு நொண்டிக் கொண்டிருந்தாள்..அவளுக்கு உதவியாக அவள் தம்பி கையில் ஒரு சின்னக் கம்பியோடு வந்து நின்றான்...பாவாடையை லேசாக தூக்கி இடுப்பில் மடிப்பில் மடித்துக் கட்டியிருந்தாள்..கணுக்காலில் கட்டியிருந்த சலங்கை சிணுங்கியது...முன்னால் வந்து விழுந்த பட்டுக் குழலை கைகளால் அவ்வப்போது விலக்கி விட்டுக் கொண்டாள்...

ம்ம் சரிடா..நம்மளும் உதவி செய்ய வேண்டியது தான்..கைலியை லேசா மடிச்சுக் கட்டிட்டு சின்னப் பையன் கிட்ட இருந்து கம்பியை வாங்கிட்டுப் போய் அவளுக்கு நேர் எதிரில் உட்கார்ந்தேன்.. என்னை நிமிர்ந்து பார்க்காமலே அவள் வேலையில் தீவிரமாக இருந்தாள்..ம்ம் நான் எதாவது பேச்சு கொடுக்கலாமா..அப்படின்னா எப்படி எப்படி பேச்சை ஆரம்பிக்கலாம்ன்னு யோசிச்சுகிட்டே இருக்கும் போது நான் கொஞ்சமும் எதிர்பாக்கல்ல...

"உங்களுக்கு ஷில்பா ஷெட்டி ரொம்ப பிடிக்குமோ....."
இது தான் என்னிடம் அவள் கேட்ட முதல் கேள்வி...

ஷில்பா செட்டி...அது யார்றா.. ஒரு வேளை கிரிக்கெட் பிளேயரா... இல்லை மல்லிகை சம்பந்தமா எதாவது மேட்டரா... ஒரு கணம் குழம்பி போயிட்டேன்...

"ஓகோ பேரேத் தெரியாமத் தான் படத்தை அந்த மாதிரி சுத்தி சுத்தி பாத்துகிட்டு இருந்தீங்களா,,,,," தம்பியை தண்ணி எடுத்துட்டு வரச் சொல்லி விரட்டி விட்டுட்டு என் கிட்ட அடிக்குரலில் கேட்டாள்.. அப்போவும் என்னை நிமிர்ந்து பார்க்கல்ல... செடியை நட்டு முடிச்சுட்டு சுத்தி சின்ன சின்னக் கல்லை வச்சு அழகா பாத்திக் கட்டிகிட்டு இருந்தா...

தண்ணியைத் தம்பிகாரன் கிட்ட இருந்து வாங்கி மெதுவா அந்த செடியின் இலைகளுக்கு வலிக்காதவாறு தெளித்தாள்..

"ஆன்ட்டி வீடு கட்டுற வரைக்கும் இந்த செடியைக் கொஞ்சம் பாத்துக்கணும்..தண்ணி எல்லாம் சரியா ஊத்தணும்... கொஞ்சம் உதவி பண்ணுறீங்களா" எங்க அம்மாக் கையைப் பிடிச்சிகிட்டு அவக் கேட்டதும் எங்க அம்மா அப்படியே உருகிப் போயிட்டாங்க,,, நான் உருகி உருகுவேக்கே போயிட்டேன்ன்னு சொல்லணுமா என்ன..

"இந்தச் செடி எங்க பொறுப்பு... என் பையன் இங்கேயேத் தான் இருப்பான்.. அவன்கிட்ட தண்ணி ஊத்தி பாத்துக்கச் சொல்லுறேன்... நீ கவலைப் படவே வேணாம் போதுமா" அம்மா வாக்கு கொடுத்துவிட்டாள்...

"ம்ம்ம்..ஆன்ட்டி இன்னொரு விஷய்ம்..அந்த மரப் பொந்துல்ல நிறைய பூச்சி இருக்குன்னு நினைக்கிறேன்... பேசாம தீவச்சி விரட்டி விட்டுருங்க... மரத்துக்கும் நல்லது என் மல்லிகை செடிக்கும் நல்லது..." என்னைப் பார்த்து லேசாக கண் சிமிட்டினாள்

"அப்படியா அம்மா.. நான் கூட ரொம்ப நாளா அந்தப் பொந்துல்ல தீ வைக்கணும்ன்னு தான் இருக்கேன்.. இந்தப் பையத் தான் நானே வைக்கிறேன்...அந்தா இந்தான்னு இழுத்து அடிச்சிகிட்டு இருக்கேன்... ம்ம்ம் இனி காலந்தாழ்த்தாம வச்சுர வேண்டியது தான்..." அம்மாவும் அவளை அமோதித்தாள்...

ஆகா அழகா இருக்காளேன்னு அசந்தா..நம்ம அடிவாரத்தையே ஆட்டிடுவா போலிருக்கே...தம்பி உஷார்டா.. எனக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது..அது வெறும் பொந்து இல்லை என் சுவீஸ் பேங்க் லாக்கர்.. என்னுடைய பல வருட ரகசிய வைப்புகளின் காப்பகம்...பெட்டகம்.. எனக்கும் என் நண்பன் பூரசு மரத்துக்கும் மட்டுமே தெரிந்த கணக்கு வழக்கு அது...வந்த முதல் நாளே அதில் இவள் மூக்கை நுழைக்கிறாளே....

காலையில் என் கண்களுக்கு ஒரு தேவதையாகத் தெரிந்தவள்..இதோ மாலை சூரியன் மயங்குவதற்குள் அவளே அவளே தான் ஒரு ராட்சசியாகத் தெரிகிறாளே...

ம்ம்ம்ம் தம்பி பொண்ணு கிட்டே கொஞ்சம் சூதனாமா இருந்துக்கோன்னு புத்தி நெத்தி பொட்டில் அடிச்சு சொல்லுது...ஆனா மனசு இருக்கு...கிறுக்கு பைய மனசு....அது பாட்டுக்கு அத்துகிட்டு ஒரு பக்கமா தென்கிழக்கு வாசமல்லின்னு பாடிகிட்டு குத்தால மலை காத்து கணக்கால்லா திரியுது...

வாசம் இன்னும் வீசும்...

ஒரு காதல் குறிப்பு

ஒரு சனிக்கிழமை மதியம் பொழுது போகாமல் இருந்த போது பழைய அலமாரி ஒண்ணு லேசாக தூசு தட்டு வா என்று சங்கேத மொழியில் தூது விட்டது... சரி நல்லா தின்னுட்டு சும்மாத் தானே இருக்கோம்ன்னு அலமாரியின் அலங்கார அழைப்புக்கு ரைட் கொடுத்து களத்தில் இறங்கினேன்...

1992....கவிதைப் போட்டி ஆறுதல் பரிசு..மாணவர் மன்றம்... ஆஹா அப்பவே நான் ஒரு கவிஞன்.. என் மனம் மேடை போட்டு மீண்டும் எனக்கு அந்த சான்றிதழை சகல மரியாதைகளோடும் கொடுத்து கவுரவித்தது... இதழோர புன்னகையோடு இன்னும் துழாவினேன்...

1993...இருக்கும் பள்ளி சுற்றுலாவில் எடுத்த புகைப்படம்.. வி.ஜி.பி கோல்டன் பீச் வாசல் அய்யனார் பக்கம் அட்டகாசமாய் போஸ் கொடுத்த படி... நான்...ம்ம்ம் அது பாலா.. அப்புறம் பத்ரி...செந்தில்...சுப்பு... சுப்பு மட்டும் இன்னும் தொடர்பில் இருக்கிறான்.. அவனுக்கு இரண்டு மாசம் முன்னாடி தான் ஒரு அழகான பெண் குழந்தைப் பிறந்தது... ம்ம்ம் செந்தில் டாக்டராயிட்டான்... இன்னும் கல்யாணம் ஆகல்ல.,.. கடைசியாப் பாத்தப்போ அவன் தன்னுடைய நாலாவது காதல் கதையை ரொம்பவே சின்சியராச் சொன்னான்...மத்த மூணு கதையையும் இதே சின்சியாரிட்டி குறையாமல் தான் சொன்னான் என்பது வேறு விசயம்... ம்ம்ம் பாலா...பத்ரி... இரண்டு பேரையும் பாத்து பத்து வருசத்துக்கும் மேல ஆச்சு... அவங்க கிட்டயும் இந்த போட்டோவோட ஒரு காபி இருக்கும்.. எப்போவாது எடுத்துப் பாத்தா என்னை நினைச்சிப்பாங்க.. அப்படின்னு எனக்கு நானே சொல்லிகிட்டேன்... அடுத்து என்ன சிக்குதுன்னு பாப்போம்...

1995... ஜெயந்தி தியேட்டர் டிக்கெட் ஒண்ணு.... அட தலைவர் படத்து டிக்கெட்.. பாட்சா... 13 ஜனவரி 1995.. மாலைக் காட்சி.. ஆட்டோக்காரன் ஸ்டில்ன்னு அப்போ எடுத்து பத்திரப்படுத்தி வச்ச டிக்கெட்.. வீட்டுல்ல சக்கரை வாங்க கொடுத்து அனுப்புன காசுல்ல... தியேட்டருக்குள் போய் போலீஸ் லத்திக்கு வளைந்து நெளிந்து வேர்த்து விறுவிறுத்து... விசிலடித்து கொண்டாட்டமாய் படம் பார்த்த ஞாபகம் மனத்திரையில் மீண்டும் ரிலீஸ் ஆகி சக்க போடு போட்டது..

ம்ம்ம் வருசத்துக்கு ஒண்ணா சிக்குன ஞாபகங்களில் நனைந்தப் படி அலமாரியில் ஒளிந்திருந்த நினைவு புதையல்களை ரசித்தப்படி நேரம் போய்கொண்டிருந்தது....

2002... ஒரு ஐடி கார்ட்.. என் கையில் சிக்கியது... ம்ம்ம் ஆறு வருடத்துக்கு முந்தைய முகம்...என் முகம்...ம்ம் பரவாயில்ல.. ரொம்ப மாறல்ல... கொஞ்சம் அழகாயிட்டேனோ.... இருக்கலாம்... அந்த கார்ட் இருந்த டைரி.... பச்சை கலர் டைரி....அந்த வருடம் கம்பெனியில் வழங்கிய டைரி... ஐடி கார்டில் இருந்த அதே லோகோ கொஞ்சம் பெரிதாய் அந்த டைரியின் முகப்பில் இருந்தது...கம்பெனியில் இருந்து விலகி வரும் போது எப்படியோ அந்த ஐடி கார்ட்டை நான் எடுத்து வந்து விட்டது எனக்கு நினைவிருந்தது... அந்த கார்டை கேட்டு அப்போதெல்லாம் அந்த கம்பெனியில் இருந்து அடிக்கடி எனக்கு போன் வரும... அந்த ஆபிஸ் ரிசப்னிஷ்ட் தான் அடிக்கடி போன் பண்ணுவா... அவப் பேர் கூட.... ம்ம்ம் அது இப்போ ஞாபகத்தில் இல்ல.. வரும் போது கண்டிப்பா சொல்லுறேன்...

அந்த டைரியின் பக்கங்களின் படிந்திருந்த தூசியினை மெல்ல விரலால் களைந்தப் படி அதில் என்ன இருக்குன்னு படிக்க ஆரம்பிச்சேன்...

பூக்கும் பூக்கள் எல்லாம்
கிளைகளுக்குச் சொந்தமில்லை...
மரத்தில் இருந்து உதிர்ந்தப் பின்னால்
இலைகளுக்கு முகவ்ரி இல்லை..
இறுக கட்டியணைத்தாலும்
கடுகளவு காற்று கூட
கைகளில் தங்குவதில்லை...
வாரியிறைந்தப் பின்னால்
மழைத்துளிகள் வானம் தேடுவதில்லை...
விழுந்தப் பின்னால் வார்த்தைகள்
உதடுகளுக்குத் திரும்புவது இல்லை...

இந்த வரிகளைப் படித்தவுடன் அவசரமாய் தம்மடிக்க வேண்டும் போல இருந்தது.. அவசரத்துக்கு அடிக்க துணிக்கு அடியில் சுருட்டி வைத்திருந்த கடைசி சிகரெட்டை எடுத்து கடைவாய் பல்லுக்குள் செருகினேன்.. பற்ற வைத்த சிகரெட் புகையை உள்ளுக்கு இழுத்து சுவாச பையை அழுக்குப் படுத்தி அப்புறமுமாய் வெளியே வீதியில் வீசி எறிந்தேன்..

சிகரெட்டின் நுனி நாக்கில் எஞ்சியிருந்த நெருப்பு என்னை வெறித்துப் பார்ப்பதாய் எனக்கு தோன்றியது...அந்த சிகரெட்டை அவசரமாய் வெளியில் தூக்கி எறிந்து விட்டு டைரி இருந்த பக்கம் திரும்பினேன்..கலைந்த தலை முடியை கோதிவிட்ட படி மோவாயைத் தடவினேன், முந்தா நாள் முளை விட்ட தாடியின் முட் குத்தல் உள்ளங்கையை அரித்தது... இன்னொரு தம் அடிக்க தேடினேன்....

2003... கம்பெனி ஆண்டு விழா புகைப்படம் என் கண்ணில் பட்டது...அந்த புகைப்படத்தில் அவளும் இருந்தாள்... கண்ணைக் கட்டிப் போடும் வண்ணத்தில் பச்சை சுடிதார்..ஒற்றை வகிடு எடுத்து முன் நெற்றியில் தவழ விட்ட கற்றை முடி... விடியோவாக இருந்திருந்தால்... ம்ம்ம் அந்த முடி அவள் நெற்றி என்னும் மேடையில் மானாட மயிலாட என ஆடி, பார்க்கும் அத்தனை மனங்களையும் ஆட்டியிருக்கும் என்பது மட்டும் கதையல்ல நிஜம்... சரி...இந்த டிவி சேனலில் வரும் கெக்கே பிக்கே தொகுப்பாளினிகளிடம் கஷ்ட்டப் படும் சிரிப்பு என்ற வஸ்து அவள் உதடுகளில் மட்டும் ஆனந்த தாண்டவமாடியது... அழகாய் பூத்து குலுங்கியது.... புகைப்படத்தின் மீது படிந்த தூசி கூட அவள் சிரிப்பு தொட தவிர்த்து தள்ளியே நின்றது.. அப்படி ஒரு அச்சச்சோ சோ சுவீட் புன்னகை....

அவளைப் பத்தி சொல்லியாச்சு.. நம்மைப் பத்தியும் சொல்லணும்ல்ல.. பெரிய அஜித்தோ விக்ரமோ..வாரணமாயிரம் சூர்யாவோ... மேடியோ எல்லாம் இல்லன்னாலும் சுமாரா ஒரு ரேஞ்சுக்கு இருப்பேன்... இந்த ஜிம் எல்லாம் போய் ஜம்ன்னு ஆகல்லன்னாலும் காலையிலே எந்தரிச்சு பீச்சோரமாய் ஓடி அப்புறம் வீட்டுக்குள்ளேயே தண்டால் ப்ஸ்கி எல்லாம் எடுத்து கொஞ்சம் மெயின்டேன் பண்ணுவோம்ல்ல டைப் ஆளுங்க நான்...

பள்ளியிலே பழகலாமான்னு பயந்து... காலேஜ்ல்ல பேசலாமான்னு யோசிச்சு...கோயிலுக்குப் போகும் போது சாமியை சைலண்ட் காரணமா வச்சு பொண்ணுங்களைப் நிமிந்து நிமிராமலும் பார்த்து... அப்படி பாக்குற வேளையிலே, நம்ம பாக்கறதை அக்கம் பக்கம் எவனும் பாத்துருவானோன்னு பயந்து பம்முனது தான் ஜாஸ்தி...

இப்படி காதல் எனக்கு அறிமுகமாகி காதலி யாருமே அறிமுகமாக மறுத்தக் காலக்கட்டத்தில் வேற வழி இல்லாமல்....

மொழி பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை.. காதலிச்சே தீருவது என்ற வெறியில் கல்லூரி காலத்தில் காஜோலைக் கண்டப்படி காதலித்தேன்.... மே தும் சே ப்யார் கர்தா ஹீன் சொல்ல பழகுவதற்குள் அஜய் தேவ்கன் காதல் கல்யாணம் என வேகமாய் போய்விட...
அடுத்து வந்த ஐஸ்வர்யாராயாவது எப்படியும் பேசி மடக்கிரலாம் என தொடை மடக்கி கை இடுக்கி கண் சுருக்கி கனவு கண்ட காலத்துக்கும் சல்மான் கான் கன் வைத்து கலங்க வைக்க...
எதோ அந்த நேரத்தில் அறிமுகமான சினேகாவை குமுதம் ஆவி அட்டைப் படம் நடுப்பக்கம் என பார்த்து பல்லிளித்து காதல கண்ணியம் காத்து வந்தேன்...

அப்படி ஒரு காதல் காலத்தில் கொஞ்சம் காஜோலின் குறுகுறுப்பு... ஐஸ்வர்யா ராயின் மினுமினுப்பு... சினேகாவின் குளிர் சிரிப்பு என என் வாழ்க்கையில் வந்து சேர்ந்தாள் ரஞ்சனி... என் ரஞ்சனி...

ஒரு வெள்ளைக்கார துரை ஆரம்பிச்ச கப்பல் கம்பெனியிலெ கம்ப்யூட்டர் தட்டுர வேலையிலே மாசம் ஒரளவு சம்பளத்துக்கு என்னையும் கூப்பிட்டாங்க... சும்மா ஏரியாவே அதிர டேய் நானும் ஆபிசராயிட்டேன் அப்படின்னு அலறலோட வேலைக்குப் போய் சேர்ந்த இடத்திலே தான் தற்காலிகமாக என் திரையுலக காதலிகள் எல்லாருக்கும் நான் துரோகியாக மாற வேண்டி போச்சு... எஸ் ஐ பெல் இன் லவ்.... லவ்..அப்படி ஒரு லவ்...

அழகானப் பொண்ணைப் பாத்தா ஒரு மயக்கம் வரும் ஒரு கிறக்கம் வரும்... வாலிப வயசுல்ல அதெல்லாம் சகஜம் தானே...எனக்கும் அது பல தடவை வந்து இருக்கு...போயிருக்கு... ரஞ்சனி விஷ்யமும் அப்படித் தானோன்னு கூட முதல்ல யோசிச்சேன்... இந்தப் பாத்த உடனே காதல் வரும்... அப்படிங்கற கருத்துக்கு பெருசா கொடி பிடிக்கிற ஆளு நான் கிடையாது...

ரஞ்சனியைப் பாக்குற வரைக்கும் காதல்ன்னா என்னவோன்னு நினைச்சிட்டு இருந்தேன்... அவளைப் பாத்தப் பிறகு காதல்ன்னா என்னன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்...

தினமும் அவளை ஒரு முன்னூறு முறையாவது ஆபிஸ்ல்ல பாக்குறது உண்டு... போகும் போது வரும் போது... கேன்டீன்ல்ல...பைக் பார்க்ல்ல... மீட்டிங் ஹால்ல.... அவகிட்ட பேசக் கூட செஞ்சு இருக்கேன்...
வழியிலே நிக்கும் போது ஒரு முப்பத்து மூணு தடவை எக்ஸ்க்யூமீ... கேட்டு இருக்கேன்...அப்புறம் கேன்டீன் லைன்ல்ல நிக்கும் போது ப்ளீஸ் இதை பாஸ் பண்ணுறீங்களா.. இப்படி ஒரு இருபது தடவை... ஒரு இரண்டு தடவை குட் மார்னிங் கூட சொல்லியிருக்கேன்...

இப்படி எல்லாம் அவளை நான் சுத்தி இருந்தப்போ ஜில்ன்னு ஐஸ்கிரீம் தொண்டைக்குள்ளே வச்ச எபெக்ட் தான் வரும்.... அது ஒரு வித சுகம்.. அடுத்த தடவை ஐஸ் கிரீம் சாப்பிடும் போது காதலோடு சாப்பிட்டு பாருங்க.. உங்க காதல் உங்க தொண்டைக் குழியோரம் ஜில்லுன்னு வந்து போகும்...

முதல் முறையாக ரஞ்சனி மூணு நாள் ஆபிசுக்கு வரவில்லை....
முதல் நாள் யாரைக் கேட்பது என புரியவில்லை... இரண்டாவ்து யாரைக் கேட்டாலும் விவரம் தெரிஞ்சா பரவாயில்லை என்று ஆனது... மூன்றாவது நாள் சத்தியமாக பொறுக்க முடியவில்லை...

அது தான் காதல் என அந்த வினாடி எனக்குள் எதோ ஒன்று ஊர்ஜிதம் செய்தது... சொல்ல முடியாத வலி என்னைக் கொன்று விழுங்கத் துவங்கியது... அட போங்கடா அவ இல்லாம ஆபிஸ் என்னடா ஆபிஸ் இழுத்து பூட்டுங்கடா... அப்படின்னு மெயில் கூட டைப் அடித்து ட்ராப்ட்ல்ல வச்சுட்டு அவள் ஞாபகத்தில் அதை அனுப்ப மறந்து அப்போதைக்கு என் வேலையையும் காப்பாத்திக் கொண்டேன்,...

அமாவசைன்னு ஒண்ணு இல்லனா பவுணர்மிக்கு ஏதுங்க மரியாதை.... நாலாவது நாள் எங்க ஆபிஸ்க்கு பவுணர்மி வந்துச்சு... அவ கை நிறைய திருச்சூர் நேந்தரங்கா சிப்ஸ்...சீடை.. முறுக்குன்னு எல்லாருக்கும் கொண்டு வந்தா...பொதுவுல்ல இருந்ததை எதோ ஒண்ணு தடுக்க நான் எடுக்காமல் விட்டது எவ்வளவு அபத்தமானது... அடுத்த சில நிமிடங்களில் காலியான வெறும் பாக்கெட்கள் மட்டுமே மிஞ்சின...அதை நான் சேகரித்து எடுத்து சிலாகித்து வைத்தது தனிக்கதை...மூன்று நாட்களாக ரஞ்சனியின் கூந்தல் உதிர்க்கும் மல்லிகை பூக்களுக்கு ஏங்கிய அவள் இருக்கை அன்று அதன் ஏக்கம் தீர்ந்து மல்லிகை வாசனையில் குளித்தது.. தனியாக என்னைப் பார்த்து சிரித்தது...

இப்படியே ஒரு ஏழு எட்டு மாசம் ஓடிப் போச்சு.. டிசம்பர் 31... வேலையை முடிச்சிட்டு நாங்க கிளம்புற நேரம்... எல்லாரும் எல்லாருக்கும் ஹேப்பி நியு இயர் சொல்லிகிட்டு இருந்தோம்... ரஞ்சனியை என கண்கள் எல்லாப் பக்கமும் தேடிகிட்டு இருந்தன... ஆனா அவளை கண்டு பிடிச்சது என்னவோ என் காதுகள் தான்..

எனக்குப் பின்னால் அவள் குரல் கேட்கவே கொஞ்சம் நிதானித்து எனக்குள் ஒத்திகை எல்லாம் பார்த்து திரும்பினேன்... சேம் டூ யூ...,சேம் டூ யூ... வெரு ஹேப்பி நியூ இயர்.. சேம் டூ யூ... இப்படி சொல்லி சொல்லி பார்த்துகிட்டு இருந்த என் தோளை யாரோ தட்ட ....அப்படியே டக்குன்னு திரும்பி.... "சேம் டூ யூ....." சொன்னால் அங்கு நின்றது என் நண்பன் அருண்...

"டேய் வாங்குன கடனை திருப்பித் தாடான்னு தோளை தட்டி கூப்பிட்டுக் கேட்டா... சேம் டூ யூவா.... -ஷேம் டு யூடா....." கடுகடுன்னு பையன் கடித்து வைக்க...,நான் அப்படியே கண்ணைப் பொத்த அதே வினாடியில் அருணின் கை குலுக்கி "ஹேப்பி நியூ இயர் அருண்...." சொல்லிட்டு ரஞ்சனி அங்கிருந்து நகர்ந்துப் போனாள்....வினாடிக்கும் குறைவான அந்த கணப்பொழுதில் தீ போல் என்னை கொளுத்தி விட்டு போகும் பார்வை ஒன்றை அவள் என் மீது பாய்ச்சியதாய் எனக்குள் ஒரு உணர்வு...சின்னதாய் ஒரு நிலநடுக்கம் எனக்குள் வந்து போனது..ரிக்டர் ஸ்கேல் ஞானம் இல்லாத காரணத்தால் என்னால் அளவைக் குறிக்க முடியவில்லை

"படுபாவி... ஒரு நூறு ரூபா...அதுக்காக இப்படி மானத்தை வாங்கிட்டானே... அவளுக்கு கேட்டிருக்குமோ... இருக்காது... இருக்குமோ..." இப்படியே யோசிச்சதுல்ல நேரமும் நகர்ந்து போனது... ரஞ்சனியும் கிளம்பி விட்டாள்...

"டேய் கிளம்பலாம் வா... நூறு ரூபா பெட்ரோலுக்கு இல்ல அதான் கேட்டேன் கோச்சுக்காதே மச்சி.. வண்டிக்கும் எனக்கும் சேர்த்து போடணும்ல்ல... நியு இயர் ஆச்சே.." அருண் கூப்பிட்டான்... அவனோடு புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து போதையில் கரையேரிய போது மறு நாள் சூரியன் நடு வானில் நின்று நான் பல் விளக்காமல் காபி குடிப்பதைக் கேலியாய் பார்த்துக் கொண்டிருந்தான்...

"ம்ம்ம் அருண் இது என்னடா.. டேபிள்ல்ல.... ?" புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு வாரம் என்னைக் காய்ச்சலில் கொண்டு விட்டதில் அலுவலகம் செல்லாத நான் என் மேஜை மீது இருந்த பத்திரிக்கை பார்த்து கேட்டேன்...

"கல்யாணப் பத்திரிக்கை... நம்ம ரஞ்சனிக்கு.டா... உனக்கு எங்கே தெரியும்.. நீ தான் அவக் கூட சரியா முகம் கொடுத்து கூட பேச மாட்டியே.... எப்போ அவளை பாத்தாலும் தலையை குனிஞ்சுட்டு அப்படி போய் நின்னுக்குவீயே... இருந்தாலும் நல்ல பொண்ணுடா.. உங்க பிரெண்ட் அந்த சைலண்ட் பார்ட்டிக்கும் கார்ட் கொடுத்துடுங்கன்னு சொல்லி உன் பேர் எழுதி கார்ட் வச்சிருக்கா... கல்யாணம் கேரளாவில்ல... அவ நேத்தோட ஆபிஸ்ல்ல லாஸ்ட் டே.... வி வில் மிஸ் ஹெர் டா...அப்புறம் நியூ இயர்க்கு ஆபிஸ்ல்ல டைரி கொடுத்துருக்காங்க... ரிசப்ஷ்னிஸ்ட் தன்யா கிட்ட இருக்கு உன் டைரி போய் வாங்கிக்க...." இந்தத் தகவலைச் சொல்லிட்டு அருண் அடுத்த வேலைப் பாக்க போயிட்டான்...

ம்ம்ம் அந்த ரிசப்னிஷ்ட் பேரை சொல்லுறேன்னு சொன்னேனெ இப்போ சொல்லிட்டேன்.. தன்யா கிட்ட டைரி வாங்கிட்டு நேரா பைக் பார்க் போய் உக்காந்தேன்...

டைரியைத் திறந்து.... என்னத் தோணுச்சோ அதை அப்படியே எழுதுனேன்.... அது...

பூக்கும் பூக்கள் எல்லாம்
கிளைகளுக்குச் சொந்தமில்லை...
மரத்தில் இருந்து உதிர்ந்தப் பின்னால்
இலைகளுக்கு முகவ்ரி இல்லை..
இறுக கட்டியணைத்தாலும்
கடுகளவு காற்று கூட
கைகளில் தங்குவதில்லை...
வாரியிறைந்தப் பின்னால்
மழைத்துளிகள் வானம் தேடுவதில்லை...
விழுந்தப் பின்னால் வார்த்தைகள்
உதடுகளுக்குத் திரும்புவது இல்லை...

என் அண்ணன் பேரு சரவணன் - 8

முந்தைய பகுதி

"நீ அவச் சொன்னதுக்கு என்னப் பதில் சொன்ன?"

சரவணன் அந்தக் கேள்வியை என்கிட்டக் கேட்டப்போ அதுல்ல கோவம் இருந்துச்சா இல்லையான்னு கூட என்னால அனுமானிக்க முடியல்ல. எல்லா விசயங்களையும் அவன் கிட்டச் சொல்லிட்டேங்கற ஒரு திருப்தி இருந்துச்சு. அடுத்து அவன் என்ன செய்வான்னு என்னால கொஞ்சம் கூட ஊகிக்க முடியாத அளவுக்கு இறுக்கமா உக்காந்து இருந்தான் சரவணன்.

அப்படி ஒரு நிலைமையிலே அவன் கேட்டக் கேள்விக்கு என்ன பதில் சொல்லுறதுன்னும் எனக்குப் புரியல்ல..

"இன்னும் என் கேள்விக்கு நீ பதில் சொல்லல்லயே..." சரவணன் என்னைப் பாக்காமலேக் கேட்டான்.

"தெரியல்ல சரவணா" நான் சொல்லி முடிக்குறதுக்கு முன்னாடியே அவன் எழுந்து போயிட்டான். வேகமாப் போயிட்டான். நான் அவன் போனத் திசையைப் பாத்துகிட்டு உக்காந்து இருந்தேன. அதுக்கு அப்புறம் அன்னிக்கு நடந்த காலேஜ் கலாட்டாக்கள் எதுல்லயும் நான் கலந்துக்காம ஒதுங்கியே நின்னேன்.. ரஞ்சனியும் ஒரு ஓரமா ஒதுங்கி நின்னுட்டா.. அடிக்கடி என்னைப் பாத்துகிட்டே இருந்தா.. நான் வேணும்னே அவப் பார்வையைத் தவிர்த்தேன்...

காலேஜ் பேசன் ஷோவுல்ல நம்ம பசங்க தான் பட்டயக் கிளப்புனாங்க...வழக்கம் போல மேடைக்கு கீழே இருந்து தான்... டெல்லியில்ல இருந்து ஒரு குரூப் வந்துருந்துச்சு... ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு அழகு... அப்போதையப் பிரச்சனையை அப்படியே ஓரம் கட்டிட்டு அந்த அழகு வெள்ளத்திலே மனசை அடிச்சுட்டு போக விட்டுட்டு கொஞ்ச நேரம் நின்னேன்..

"சிவா.. நான் வீட்டுக்குப் போகணும்... என்னக் கூட்டிட்டு போ..."

கையை மார்புக்கு குறுக்காக கட்டிக்கிட்டு என் முன்னால் வந்து நின்னா ரஞ்சனி..

"பஸ் வரும் அதுல்ல போலாமே."

"பஸ் எடுக்க இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும்.. எனக்கு அவசரமாப் போகணும்.. பசங்க கிட்ட வண்டி வாங்கிட்டு கொண்டு போய் விடு..." கிட்டத்தட்ட ஒரு கட்டளை மாதிரியே போட்டா..

ரஞ்சனியை அவென்யு வாசலில் போய் இறக்கிவிட்டேன்...

"சிவா...நீ எனக்கு இன்னும் பதில் சொல்லல்ல...பிடிக்கும் பிடிக்கல்ல எதுவுமே ஓ.கே தான்.. ஆனா அந்த பதில் உன் மனசுல்ல இருந்து வரணும் சிவா... புத்தியக் கேட்டு வரக்கூடாது..."

சொல்லிட்டு அவப் பாட்டுக்குப் போயிட்டா. அந்த நேரம் பாத்து சரவணனும் அங்கே வந்தான். எங்களை அவன் பார்த்த பார்வையிலே ஒரு நூறு இருநூறு கோழியை உரிச்சுப் போட்டிருந்தா அருமையான தந்தூரி கிடைச்சிருக்கும்.. அப்படி ஒரு நெருப்பு பார்வை அது..

அவன் கையிலே இருந்த டிராவல் பேக் அவன் அவசரமா ஊருக்குக் கிளம்புரான்னு சொல்லிச்சு... அவன் எதுவும் பேசிக்காம ரோட்டைப் பாத்து நடந்துப் போயிக்கிட்டு இருந்தான், நானும் அவனை அந்த நிமிசம் எதுவும் கேக்க வேணாம்ன்னு விட்டுட்டேன்...பைக்கைத் திருப்பிக் கொடுக்க காலேஜ்க்குப் போயிட்டேன்...

இது நடந்து ஆறு மாசம் ஆயிருச்சு.. அது வரைக்கும் சரவணன் வீட்டுக்கே வர்றல்ல.. ஆபிஸ்ல்ல வேலை அதிகம்ன்னு காரணம் சொன்னதா வீட்டுல்ல பேசிகிட்டாங்க. அவனுக்குப் பொண்ணு பாக்கப் பேச்சு எடுத்தப்போவும் அவன் எதுவும் பிடி கொடுக்கல்லன்னு சொல்லிகிட்டாங்க....

என் அண்ணன் சரவணும் நானும் ஆரம்பகாலத்துல்ல எப்படி இருந்தோமோ அந்த நிலைமைக்கே மறுபடியும் போயிட்டோம்.... முன்னாடி மாதிரி இல்லாம இப்போ என் மனசை எதோ ஒரு பாரம் அழுத்துச்சு...சரவணன் கூடப் பேசணும்..கலகலப்பா இருக்கணும்ன்னு எதோ ஒண்ணு எனக்குள்ளே ஏங்குற மாதிரி இருந்துச்சு...

ரஞ்சனியை விட்டு எவ்வளவு விலக முடியுமோ அவ்வளவு விலகி வந்தேன்...

நான் அவனுக்கு துரோகம் பண்ணல்லன்னு சரவணன் புரிஞ்சுக்கணும்ன்னு நினைச்சேன்... ஆனா அதை எப்படி அவனுக்கு சொல்லுறதுன்னு புரியல்ல...

எப்படியோ ஒரு விடுமுறைக்கு அம்மாவுக்கு உடம்பு முடியல்லன்னு சொல்லி அவனை வர வச்சாங்க... வந்தவனுக்கு ராஜ உபச்சாரம்... வகை வகையா விருந்து வச்சு அவனை திணறடிச்சாங்க... இரண்டு பேரும் ஒண்ணா உக்காந்து தான் சாப்பிட்டோம்.. அவனுக்கு இரண்டு நாட்டு கோழி முட்டை எனக்கு பாதி முட்டை.. இன்னொரு பாதி எங்கப்பாவுக்கு அதையும் அவர் அவனுக்கே வச்சது பெரியக் கொடுமை... முட்டைக் கொடுமையே போதும் மத்த மெனு வெல்லாம லிஸ்ட் போட்டா பதிவு தாங்காது அதுன்னால்ல விடுறேன்..

அவனாப் பேசுவான்னு நான் காத்திருந்து கடுப்பானது தான் மிச்சம்... பொறுத்துப் பாத்துட்டு நானே அவன் முன்னாடி போய் நின்னேன்...

"சரவணா..."

"ம்ம்ம்" அவன் தலையைக் கூடத் தூக்காம முனகுனான்...

"நான் என்னத் தப்பு பண்ணேன்... ஏன் என்னை விரோதி மாதிரி நடத்துற?"

"ம்ம்ம்ம்ம்" தலையை நிமித்துனவன் முகத்தில் அப்படி ஒரு மூர்க்கம். நான் ஒரு நிமிசம் கொஞ்சம் ஆடிப்போயிட்டேன். அடுத்த நிமிசமே மறுபடியும் முகத்தை தரையிலேத் தொங்கப் போட்டுகிட்டான்..

குனிஞ்சத் தலை நிமிரமாலே கேட்டான்....

"ரஞ்சனியை நீ காதலிக்கிறியான்னு அன்னிக்கு நான் உன்னை கேட்டதுக்கு என்னப் பதில் சொன்ன சிவா?"

"தெரியல்லன்னு சொன்னேன் சரவணா"

"உன் கேள்விக்கும் என் பதில் அது தான்..." அப்படின்னு சொல்லிட்டு எந்தரிச்சுப் போயிட்டான்.

கடைசிக் கட்டப் பேச்சு வார்த்தையும் முறிந்த நிலையில் நான் மனத்தை ஆற்ற ஒரு தம் பற்ற வைத்து மாடியில் போய் நின்றேன்.

என் வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் எங்க அவென்யு தண்ணித் தொட்டி தெரியும்.. அந்தத் தண்ணித் தொட்டிப் படிகளில் உச்சியில் சரவணன் நின்று தம்மடித்து கொண்டிருந்தான்.. இரண்டு பேர் விட்ட புகைக் கூட நேர் எதிர் திசைகளில் பயணித்தன.. அதை யோசிக்கும் போது எனக்கு லேசானச் சிரிப்பு வந்துச்சு...

"என்னடா இது... நான் பாட்டுக்குப் போயிட்டு இருந்தேன்... நூல் இல்லாத பட்டம் மாதிரி... அண்ணனும் இல்ல ஆட்டுக்குட்டியும் இல்லன்னு... தொட்டாலே தகாதுன்னு தள்ளித் தானே நின்னோம்... நீ திருட்டுப் பய மாதிரி அன்னிக்கு ஓடி வர.. எனக்கும் உனக்கும் இனிஷியல் கொடுத்த ஒரு அப்பாவுக்காக உன்னை நான் ஊர் மாத்துல்ல இருந்து காப்பாத்துனேன்... கொஞ்சூண்டு சகோதரப் பாசமும் தான்....பயபுள்ள நீ தானேடா உன் காதலைச் சொல்லி கரையேத்துன்னு என் கிட்டச் சரக்கெல்லாம் வாங்கிக் கொடுத்து ரெக்கமெண்டு கேட்டு நின்ன.... உன் கெட்ட நேரம்.... உன்ன அவளுக்குப் பிடிக்கல்ல... என் கெட்ட நேரம் என்ன அவளுக்குப் பிடிச்சுப் போச்சு... எனக்கும் லேசா அவளைப் பிடிச்சுத் தொலைச்சுருச்சு... ஆனாலும் தம்பி நான் ஜெண்டில் மேன்டா...அண்ணன் ஆசைப்பட்ட பொண்ணுன்னு என் லவ்வை டெவலப்பிங் ஸ்டேஜ்ல்ல டிலிட் பண்ணத் தான்டா ட்ரைப் பண்ணேன்... நீ தான் தம்பியைத் தப்பா.......

நடந்த விசயத்தை எல்லாம் கோர்வையா மனசுல்ல அப்படியே ரீல் ஓட்டிகிட்டு வரும் போது இந்த இடத்துல்ல வந்து தட்டிச்சு

"தம்பியா... ஆகா... நீ என்னைத் தம்பியாவே நினைக்கல்லயேடா.. உன் லவ்வைச் சொல்ல ஒரு போஸ்ட்மேனாத் தானே வச்சுருந்து இருக்க... இத்தன வருசம் இல்லாத பாசம் புதுசாப் பொங்குன உடனே நானும் அண்ணன் அண்ணன் காதல்ன்னு மறுகிட்டேன்.... நீ என்னைக் கேவலம் சரக்குக்கு விலைப் போற சல்லி பயலா இல்லப் பாத்து இருக்க...சரவணா... உனக்கு எப்பவும் எதுல்லயும் ஜெயிக்கணும்... அதுக்கு எதையும் யாரையும் வளைக்கலாம் நெளிக்கலாம்..தம்பி கூட உனக்கு வெறும் ..I HAVE BEEN USED BY YOU TO WIN OVER A GIRL " நினைக்க நினைக்க எனக்கே என் மீது அருவெருப்பாய் வந்தது

"ஆனாலும் உன்னாலே ஜெயிக்க முடியல்லயே சரவணா" இந்த எண்ணம் கொஞ்சம் ஆறுதல் அளித்தது.

அடுத்த நாள் மதியம் மேட்னி ஷோ படம் முடித்து சுற்றி விட்டு அவென்யு வந்து சேரும் போது எங்க வீடு பூட்டியிருந்துச்சு...

"சிவா.. உங்க அண்ணன் சரவணன்.. தண்ணி தொட்டியில்ல இருந்து கால் தவறி கீழே விழுந்துட்டான்.. நிறைய ரத்தம் போயிருச்சு..ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போயிருக்காங்க..." பக்கத்து வீட்டு மாமி சொன்னாங்க...

அந்த வினாடியில் எனக்குள்ளே ஏற்பட்ட அதிர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது.... படம் முடிஞ்சு வந்த மொத்த டீமும் அப்படியே ராயப்பேட்டை நோக்கி கிளம்புனோம்... யார் வண்டியிலே நான் உக்காந்துப் போனேன்ங்கற விசயம் இப்போ வரைக்கும் என் நினைவுக்கு வரவே இல்ல.. அதை யோசிச்சு நினைவுக்கு கொண்டு வரும் முயற்சிகளையும் நான் விட்டு ரொம்பக் காலம் ஆச்சு.

அப்பாவோட ரகசிய அழுகை... அம்மாவின் கதறல்.... சரவணன் ஒரு மரக்கட்டை போல் படுத்திருந்த அந்த ஆஸ்பத்திரி அறை... ஒரு பத்து நாட்கள் இப்படியே ஓடிப் போச்சு....

யார் யாரோ வந்து பாத்துட்டுப் போனாங்க... அப்பா கையைப் பிடிச்சு ஆறுதல் சொன்னாங்க.. அம்மா மட்டும் அழுதுகிட்டே இருந்தாங்க... முதல் முறையா அப்பா என் தோளைப் பிடிச்சுகிட்டு ஒரு பத்து நிமிசம் நின்னார்... அவரோட கை ரெண்ட்டும் என் தோளை அழுத்துன விதத்துல்ல நான் நிறைய புரிஞ்சுகிட்டேன்... MY LIFE WAS NEVER GOING TO BE THE SAME..

அப்பாவோட பேங்க் பேலன்ஸ் கணிசமாக் குறைஞ்சது...ஆனாலும் சரவணன் அசையவும் இல்ல.. பேசவும் இல்ல....

ஒரு பத்து நாளுக்கு அப்புறம் அவென்யுக்குப் போனேன்... ஆள் அரவமில்லாத மதிய நேரம்...மதிய தூக்கம் பழக்கமில்லாதக் காரணத்தாலே.. அப்படியே எழுந்து நடந்தேன்... எதேச்சையாத் தண்ணீர் தொட்டி பக்கம் போனேன்.. சரவணனை நான் கடைசியாப் பாத்த இடம்... சரவணன் கால் தடுக்கி விழுந்த இடம்... மெதுவா படிகள் ஏறி மேலப் போனேன்...

இங்கேத் தான்... இங்கே இருந்து தான் சரவணன் கால் தடுக்கி....அந்த சுவத்தையும் அதனை ஓட்டி இருந்த உச்சிப் படிக்கட்டின் கீழ் ஓரத்தில் மறைவாய் சிக்கியிருந்த அந்தப் பொருளையும் கவனித்த என்னால் அவன் கால் தடுக்கி தான் விழுந்திருப்பான் என சத்யமா நம்ப முடியாமல் போனது...

________________________________________________________________________

நாட்கள் நீண்டு.. வாரங்கள் விரைந்தன... மாதங்கள் கரைந்தன... சரவணன் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை...
"NOW HE IS IN DEEP COMA BUT THERE IS A CHANCE OF HIM SURVIVING IF YOU BELIEVE IN MEDICAL MIRACLES"

எங்க தூரத்து உறவுக்கார டாக்டர் ஒருத்தர் பாக்க நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி இருப்பார்... எங்க கிட்டச் சொன்னார்...சரவணனைத் தன்னோட மருத்துவமனையிலே வச்சு கவனிக்கறதுமாச் சொன்னார்.. எதோ ரிசர்ச் ரிசன் அப்படின்னு அவருக்கு அதுல்ல ஒரு லாபம்... அப்பா அம்மா இரண்டு பேரும் மெடிக்கல் மிராக்களோ.. என்னவோ பெத்தப் புள்ள கண்ணைத் தொறப்பான்ன்னு நம்புறாங்க..வருசங்கள் ஓடிப் போயிட்டே இருக்கு....

"ஆகா ரொம்ப் நேரம் படியிலே உக்காந்துட்டேன் போலிருக்கே.... அதே இடம்... இப்பவும் அந்த சுவத்தைத் தான் பாத்துகிட்டு இருக்கேன்.... அதுல்ல சரவணன் கையெழுத்துல்ல
சாதல் சாதரணம்... காதல் சதா ரணம்....." அப்படிங்கற கவிதை...
கவிதையைப் படிச்சுட்டு என் பாக்கெட்டுக்குள்ள கைவிட்டு நான் அன்னிக்கு இதே இடத்துல்லப் பாத்த... அந்தப் பொருளை... அந்த உடைந்த வெள்ளிக் கொலுசு மணியை எடுத்து நிலா வெளிச்சதுல்ல பாக்குறேன்... ஒரு பொழுதினில் ரஞ்சனியின் கால்களை அலங்கரித்து என் சித்தம் கொள்ளைக் கொண்ட கொலுசு மணி ஆச்சே அது..."

பிகு: சரவணன் ஆஸ்பத்திரியிலேச் சேந்த அடுத்த நாள் ரஞ்சனி அவென்யு விட்டுப் போயிட்டா. காலேஜ் பைனல் செம் பரீட்சைக்கும் வர்றல்ல. செப்டம்பர்ல்ல எழுதுனதாப் பின்னாடி கேள்விபட்டேன். பின்னாடி அவக் குடும்பமும் மெதுவாக கேரளாவுக்கு இடம்பெயர்ந்துட்டாங்க.. அவென்யு தோழிகள் ஒண்ணு ரெண்டு பேர் கிட்ட எப்போவாது தொடர்பு கொள்ளுரான்னு கேள்வி படுறது உண்டு...அவக் கல்யாணம்... குழந்தை எல்லாம் இப்படி காத்து வாக்குல்ல வந்த செய்திகள் தான்...

நான் , ரஞ்சனி, சரவணன் மூணு பேர் சம்பந்தப்பட்ட இந்த நிகழ்வுகள்ல்ல எனக்குத் தெரிஞ்சதை எல்லாம் உங்க கிட்டச் சொல்லிட்டேன்... எனக்குத் தெரியாத விசயம் ஒண்ணு தான்.. அதைச் சொல்லுற நிலைமையிலே சரவணன் இல்ல... ரஞ்சனி சொல்லுவாளா தெரியல்ல.... ஆனா எனக்குத் தெரிஞ்சிக்கணும் என்னப் பண்ணலாம் சொல்லுங்க...?

Thats all for now folks...

என் அண்ணன் பேரு சரவணன் - 7

முந்தைய பகுதி படிக்க

ரஞ்சனியோட நான் ஓட்டலுக்குப் போன விஷயம் அப்பாவோட பிரண்ட் ஒருத்தர் மூலமா அப்பாவுக்கு போய் அது வீட்டு நடுக்கூடத்துல்ல பெரிய பூகம்பமா வெடிச்சு நம்ம பேர் இன்னும் கொஞ்சம் ஆழமா அகலமா ரிப்பேர் ஆச்சு... சரவணன் காதுக்கும் இந்த விவரமெல்லாம் போச்சு.. ஆனா அவன் பெருசா அலட்டிக்கல்ல.. என் கிட்ட எதுவும் கேக்கல்ல...

அதுக்குப் பிறகு நான் ரஞ்சனியோடப் பேசறதைக் குறைச்சுக்க எவ்வளவோ முயற்சி பண்ணேன். ஆனா அதை அவப் புரிஞ்சிக்கவே இல்ல...காலேஜ் கல்சுரல்ஸ் வந்துச்சு.. மெக்கிடோஸ் 2000... அதுக்கு எல்லாரும் தயாராகிட்டிருந்தாங்க...

காலேஜ் ஹாஸ்ட்டல் மொட்டை மாடியிலே முழுசா நாலு சிகரெட்டை நடந்துகிட்டே ஊதி தள்ளூனேன்...பிரச்சனையின் பாரம் உச்சந்தலையை அழுத்துனதுல்ல கத்தையா முடி கொட்டுச்சு...நடந்த நடையிலே செருப்பும் மொட்டை மாடி தரையும் தேஞ்சுப் போச்சு.. ரொம்பவே யோசிச்சதுல்ல மூளையிலே மிச்சம் மீதி எல்லாம் தீஞ்சுப் போயிருமோன்னு பயம் வந்துருச்சு... வர்றது வரட்டும்டா... இனி சரவணன் கிட்டப் போய் இத்தனை நாளும் நான் உன் காதலை ரஞ்சனிகிட்ட சொல்லல்ல... சொன்னதா உங்க கிட்ட ரீல் தான் விட்டேன்னு சொன்னா விளைவு விபரீதமாப் போவுலாம்... இல்ல விவகாரமாவும் போவலாம்... அதுக்குப் பேசாம துணிஞ்சுப் போய் ரஞ்சனி கிட்ட சொல்லிருவோம்...எங்க அண்ணன் உன்னைக் காதலிக்கிறான்... உன்னை அண்ணியாத் தான் நான் பாக்குறேன்னு ( மனசைக் கல்லாக்கி...சரி வர்றல்லன்னா புல்லாக்க்கியாவது) சொல்லிரணும்டா

நாம் எல்லாம் யார்... வந்த வழி என்ன? மன்னன் பூங்குளத்தில் ஒண்ணா ரெண்டா வண்ண மீன்கள்...அட பாவி பைய சரவணன் சென்டிமெண்ட் டைப்... காதல் கருவாடு... சாதல் சடுகுடுன்னு ரைமிங்கா கவிதை எல்லாம் எழுதுறான்... நமக்கு இதயம் பெருசு... இன்னும் எத்தனைப் பேருக்கு அதை ரென்டுக்கு விட வேண்டியிருக்கு...

"டேய் சிவா.. உனக்குப் பாக்குற எல்லாப் பொண்ணுமே பியூட்டிபுல்டா.. கல்லிலும் கலைவண்ணம் காணும் சிற்பி மாதிரிடா நீ.. ஆனா சரவணன்... காதலிச்சு கவுந்துப் போன கப்பிடா... அதுன்னால்ல.... ரூட்டை மாத்து... பாட்டை மாத்து... போயிட்டே இருடா...." உள் மனசு உக்கார வச்சு அம்புட்டு நேர்த்தியாப் புத்தி சொன்னப் பிற்கும் கேக்கல்லன்னா எப்படி... ஒரளவு தெளிவாயிட்டேன்... ரஞ்சனியைப் பாக்கப் கிளம்புனேன்......

பஸ் ஸ்டாப்க்கு எதிரில் வி.ஐ.பி பட போஸ்டர் ஓட்டி இருந்தாங்க...அங்கிட்டும் இங்கிட்டும் மேஞ்சிகிட்டு இருந்த நம்ம கண்ணு போஸ்டர்ல்ல இருந்த பொண்ணு மேல போய் கன்னு மாதிரி குறி வச்சு நின்னுருச்சு.. கையிலே நாயர் கடை டீ சட்டுன்னு ஓவர் சூடு ஆன மாதிரி ஒரு பிலீங்... யம்மாடி ஜீன் ஸ் டைட் பனியன்ன்னு புதுசா ஒரு குட்டி கோலிவுட்டுக்கு அறிமுகம் போலன்னு நெனச்சுகிட்டு டீயை உதட்டுக்கு ஒரு இன்ச் கீழே இறக்கி கொட்டவும்... அந்த நினைப்பு கூட இல்லாம நின்ன என்னை தோள்ல்ல தட்டி ஒரு கை உலுக்கிச்சு....

வூ இஸ் த டிஸ்டர்பன் ஸ் அப்படின்னு ஒரு மாதிரி கோவ எபெக்ட் காட்டி திரும்பிய நான் அப்படியே டீயை மொத்தமா கவுத்துட்டு திறந்த வாய் மூடாமல் நின்னேன்... பின்னே போஸ்ட்டர்ல்ல பார்த்த அதே பொண்ணு என் பக்கத்துல்ல அதே ட்ரெஸ்ல்ல வந்து நின்னா நான் என்ன ஆகியிருப்பேன்ன்னு யோசிச்சுப் பாருங்க....

ஏய்...என்ன.... டீயை எல்லாம் கொட்டிட்டு நிக்குறே..அப்படி என்ன யோசனை?

"இல்ல தீடிரென்னு டீ ஒவராக் கொதிக்க ஆரம்பிச்சுருச்சு அதான்.... " என்று கண்ணை இமைக்க மறந்து அவளையே பார்த்தேன்...

அன்னிக்கு சேலையிலே வந்து மனசை கேக்காமலே வாங்கிப் போனா,, அதைத் திருப்பி வாங்கவே நடையா நடந்து செருப்பையும் மொட்டை மாடியையும் தேய்ச்சு இப்பத் தான் கேக்கலாம்ன்னு வந்து நிக்குறேன்.. அதுக்குள்ள ஜீன் ஸ் ஷர்ட்ன்னு மாடர்ன்னா வந்து மனசை இரக்கமில்லாம மர்டர் பண்ணிருவாப் போலிருக்கே.... வி.ஐ.பியில்ல அறிமுகமான அந்தப் புது பொண்ணு யார்ன்னு கண்டுபிடிச்சிங்கன்னு வைங்க.. ரஞ்சனி எப்படி இருப்பான்னு உங்களுக்கும் தெரிஞ்சுப் போகும்...

"என்ன ஆனாலும் சிவா... ரிவர்ஸ் கியர் மட்டும் போடாதே... உனக்குன்னு ஒரு ரூட் இருக்கு.. இந்த கவிதை கதறல் எல்லாம் உனக்கு ஒத்து வராது... அதுன்னால்ல.."

உள்ளே இருந்த மனச்சாட்சி கிட்டத்தட்ட நெஞ்சாங் கூட்டை கிழிச்சிட்டு வெளியே வந்து என் செவட்டுல்ல நாலு அறை விட்டு, சொன்னதை எல்லாம் மறுபடியும் ஞாபகப்படுத்த முடிவு பண்ணிகிட்டு இருக்கறது எனக்கும் விளங்கிருச்சு...மனச்சாட்சியை உள்ளேயே இருக்கும் படி வேண்டி விரும்பி கேட்டுகிட்டு எடுத்த முடிவுல்ல உறுதியா இருக்கறதா இன்னொரு எக்ஸ்ட்ரா முடிவும் பண்ணிகிட்டேன்...

"ரஞ்சனி நான் உன் கிட்டத் தனியாப் பேசணும்....."

"கல்சுரல் முடியட்டுமே..."

"இல்ல அவசரம்..." நான் கொஞ்சம் பிடிவாதமாவே சொன்னேன்...

அதே ஹோட்டலுக்குப் போனோம்... காபியும் அவளுக்குப் பிடித்த வெங்காயத் தோசையும் சொன்னோம்... இரண்டு கைகளால் காபி கோப்பையைப் பிடித்தப் படி பாதி முகம் மறைத்து அந்த பெரிய விழிகளை விரித்து புருவம் உயர்த்தி என்ன என்பது போல் என்னை ரஞ்சனி கேட்ட அழகு இருக்கே.... ஆத்தாடி அதுக்காகவே அவளோட இன்னும் ஆயிரம் காபி குடிக்கலாம் போலிருக்கே...

அவளூடைய அந்த அலட்சியமான பாவனைகள் ஒவ்வொன்றும் என்னையுமறியாமல் என்னை வசப்படுத்திக் கொண்டு இருந்தன...

"என்னவோ சொல்லணும்ன்னு சொன்ன.. ஒண்ணும் பேசமா உக்காந்து இருக்க...." ஒரு வித கேலியும் கிண்டலும் கலந்துக் கேட்டாள்..

"அது வந்து.. எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல்ல" நான் ஒரு ராகமாய் இழுத்தேன்...

"உங்க அண்ணன்ன்னு ஒருத்தன் சுத்திகிட்டு இருக்கானே சரவணனா அவன் பேரு... அவன் சொன்னா மாதிரி... நீயும் சொல்லப் போறீயா...?"

எனக்குள் எங்கோ சுருக்கென்று அவள் கேள்வியில்ல ஒளிஞ்சிருந்த ஏளனம் குத்தியிருச்சு...கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்குள்ளே இருந்த மயக்கம் கிறக்கம் எல்லாம் அப்படியே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிகிட்டு இருந்தன...ஒரு மாதிரியான இறுக்கம் என்னை அப்படியே வந்து பிடிச்சு அழுத்திச்சு...

"என்னை லவ் பண்ணுறானாம்... என்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறானாம்... என் கூட ரெண்டு குழந்தைப் பெத்துக்கப் போறானாம்... பேர் எல்லாம் கூடச் சொன்னான்... இதை எல்லாம் சொல்லுறதுக்கு அவனுக்கு எப்படி.....இந்த இடத்தில் ஒரு அலட்சிய புன்னகை சிந்தியவள் மேலயும் பேசுனா... உங்க அண்ணன் மாதிரி போன ஒரு வருசத்துல்ல என் கிட்ட ஆறு பேர் வந்து சொல்லிட்டானுங்க...எல்லாவன் மூக்கையும் உடைச்சு அனுப்பிட்டேன்... இப்போ நீயும் எதோ சொல்லணும்ன்னு ஆரம்பிக்குறே... என்னச் சொல்லப் போற.. ஐ லவ் யூ வா....?"

அது என்ன எவனுக்கும் அடங்காதப் பேச்சு..அதுவும் என் அண்ணனையே அவமானப்படுத்துற பேச்சு.. அதுவும் என் கிட்டேயே....எனக்குள்ள.. எங்கேயோ ஓரமா படுத்து கால் நீட்டி படுத்துகிட்டு இருந்த சனியன் சட்டுன்னு என் நாக்குல்ல ஏறி நடுமத்தியிலே கால் மேல கால் போட்டு உக்காந்துகிட்டான்... அந்த விவரம் தெரியாத நான் படு பந்தாவா மவுத்தை நல்லா ஓப்பன் பண்ணி சவுண்டா ( சினிமான்னா இந்த சீனுக்கு எக்கோ எபெக்ட் எல்லாம் டி.டி.எஸ்ல்ல் பி.ஜி.எம்மா சேத்துருப்பாங்க) சொன்னேன்....

"ஆமா ரஞ்சனி நான் உன் கிட்ட ஐ லவ் யூ சொல்லத் தான் இங்கே கூட்டிட்டு வந்தேன்... இதோ இப்போவும் சொல்லுறேன்... ரஞ்சனி ஐ லவ் யூ..."

அடுத்து அப்படியே பொங்குவா... வெங்காய தோசையில்ல் மீதி இருந்த தேங்கா சட்னியை எடுத்து முகத்துல்ல வீசுவான்னு ஒரு மாபெரும் யுத்தத்துக்கு ரெடியாவுற போர் வீரன் மாதிரி உள்ளுக்குள்ளே ஒத்திகை எல்லாம் பாத்துட்டு அவளை பாத்தேன்...

அவப் பொங்கவே இல்ல... பொங்குற மாதிரியும் தெரியல்ல... மிச்சம் இருந்த வெங்காயத் தோசையை வெக்கம் இல்லாம தின்னுகிட்டு இருந்தா... வெக்கம் எதுக்குன்னாக் கேக்குறீங்க... போருக்கு நான் ஆயத்தம் ஆன கேப்ல்ல என் தட்டுல்ல மிச்சம் இருந்த வெங்காயத் தோசையை இல்ல அவ தின்னுகிட்டு இருந்தா..

உள்ளுக்குள்ளே இருந்த மனச்சாட்சிங்கற மானஸ்தன் அன் பிளான்ட்(unplanned) லீவை என் கிட்டச் சொல்லாமலே எடுத்துட்டு ஏழு கடல் தாண்டி ஏழு வருசம் பயணம் கிளம்பிட்டான்...

"எல்லாவனுக்கும் சொன்ன பதிலை உனக்குச் சொல்ல முடியாது சிவா... " அவள் விரல்கள் வெங்காயத் தோசையில் மெல்லிய கோலம் போட்டுக்கிட்டு இருந்தன...

"எங்க அண்ணனுக்கு என்ன குறை...?" எப்படியோ கஷ்ட்டப்பட்டு அந்தக் கேள்வியைக் கேட்டே விட்டேன்...

"உன் அண்ணன் கிட்ட என்ன குறைன்னு எனக்கு தெரியாது.. ஆனா நீ என் கூட இருந்தா எந்த குறை இருந்தாலும் பெருசாத் தெரியாதுன்னு மட்டும் மனசுக்குப் படுது சிவா..."

எனக்கு என்னச் சொல்லுறது தெரியாம நின்னேன்...

அதிசயமாய் அந்த மார்ச் மாதத்து பகலில் மழை பெய்தது...

ரஞ்சனிக்குக் காத்திருக்காமல் மழையில் நனைந்தப் படி காலேஜ் நோக்கி நடக்க ஆரம்பிச்சேன்....

காலேஜ் வாசலில் நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை சரவணன் எனக்காக காத்திருப்பான்னு...

தொடரும்

Blogger Templates by Blog Forum